கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்றிய முதலமைச்சர் ஸ்டாலின்.. பெருமையுடன் வாழ்த்திய ஜவாஹிருல்லா..

By Ezhilarasan BabuFirst Published May 7, 2021, 4:59 PM IST
Highlights

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இந்த ஆணைகளை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமார வரவேற்கின்றேன். குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகளில் நான்கு வாக்குறுதிகளை உடனடியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
 

கொரோனாவுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு ஒரு மகத்தான அறிவிப்பு என மனிதநேய மக்கள் கட்சி  தலைவர் ஜவாஹிருல்லா வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்: 

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இன்று பதவியேற்றுக் கொண்ட திமுக தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல் 5 கையெழுத்துகள் உட்பட முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அதில் முதலாவதாக கொரோனா நிவாரணமாக ரூ.4000 அதிலும் முதல் தவணை ரூ. 2000 இந்த மாதமே வழங்கப்படும் என்றும், இரண்டாவதாக மே 16 முதல் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மூன்றாவதாக மகளிர் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்றும், மிக முக்கியமாக கொரோனா பாதித்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளுக்கு முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைக்கான கட்டணங்களை தமிழக அரசே ஏற்கும் என்றும் அதேபோல் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்தவும் அதில் வரும் புகார்களை பெற்று 100 நாட்களுக்குள் தீர்வு காண இந்திய ஆட்சிப்பணி அலுவலர் ஒருவரை நியமிக்கும் ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். 

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இந்த ஆணைகளை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மனமார வரவேற்கின்றேன். குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகளில் நான்கு வாக்குறுதிகளை உடனடியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பல்வேறு தரப்பு மக்கள் இந்த கொரோனா நோயின் பிடியில் சிக்கி சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு ஒரு மகத்தான அறிவிப்பாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகின்றது. முதலமைச்சரின் இந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை தமிழக மக்கள் வெகுவாக பாராட்டி வருகிறார்கள். முதலமைச்சர் பணி மென்மேலும் சிறக்க மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அவரை வாழ்த்துகிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

 

click me!