தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறோம் தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்
தமிழக முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று அவர் போட்டியிட உள்ள எடப்பாடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் திங்கட்கிழமை மதியம் எடப்பாடி சென்றடைந்தார். அங்கு தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த எடப்பாடியாருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்று மதியம் 1.15 மணி அளவில் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் நடத்தும் அலுவலரான தனலிங்கத்திடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அங்கிருந்து ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார்.
அதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 1989ஆம் ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். அதில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து எனக்கு பல்வேறு வாய்ப்புகள் அம்மா வழங்கி இருந்தார்கள். மாபெரும் மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெற்று பல்வேறு திட்டங்களை எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு செய்து கொடுத்து இருக்கின்றேன்.
தேர்தல் அறிக்கையில் தெரிவித்த அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறோம் தற்போது அதிமுக தேர்தல் அறிக்கையை மக்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் அடித்தட்டு மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களும் சமூக ஆர்வலர்களும் தேர்தல் அறிக்கையை வரவேற்றிருக்கிறார்கள் என்றார்.
ஏற்கனவே நிதி பற்றாக்குறையாக உள்ள போது ஆறு சிலிண்டர்கள் தருவதாக தெரிவித்து இருக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர்... இந்தியா முழுவதுமே கடன்சுமை இருக்கின்றது அனைத்து மாநிலங்களிலும் கடன் சுமை உள்ளது ஆனால் வளர்ச்சிப்பணிகள் தொய்வு அடையாமல் செய்து இருக்கின்றோம் என தெரிவித்தார்