
இன்று என்ன நடக்கும்? வன்முறையை தடுக்க உஷார் நிலையில் 20 ஆயிரம் போலீசார்…
தமிழகத்தில் சசிகலா மற்றும் ஓபிஎஸ் இடையே எழுந்துள்ள அதிகாரப் போட்டி உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரு தரப்பினரும் தங்களுக்கான ஆதரவை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த இக்கட்டான நிலையில்தான் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
இதனால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஏற்கனவே போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நேற்று இரவு முதல் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
முன் எச்சரிக்கையாக தமிழகம் முழுவதும் 1000 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் முக்கியமான 20 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 எஸ்.பிக்கள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சென்னை முழுவதும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீடு, அவருக்கு ஆதரவு அளிக்கும் அமைச்சர், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் வீடுகளில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
அதேபோல், பொதுமக்கள் அதிகம் கூடும் மெரினா, பேருந்து நிறுத்தங்கள், வணிக வளாகங்களில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சென்னையை அடுத்த கூவத்தூர் பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், அவர்களுக்கு எதிராக தீர்ப்பு இருக்கும் பட்சத்தில் சென்னை ஆவடியில் துணை ராணுவப்படை என்று அழைக்கப்படும்.
மத்திய ரிசர்வ் போலீசாரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால், அவர்களும் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.