அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை அமைக்க அனுமதி... விரைவில் திறப்புவிழா

By manimegalai aFirst Published Oct 29, 2018, 11:26 AM IST
Highlights

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்க நிபந்தனையின்பேரில் சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்க நிபந்தனையின்பேரில் சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.

திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமாகிய கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கருணாநிதியின் 8 அடி உயரமுள்ள வெண்கலச் சிலை திமுகவின் தலைமை நிலையமான சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்படும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையை வடிவமைக்கும் பணி, திருவள்ளூர் மாவட்டம் புதுப்பட்டு பகுதியில் நடைபெற்று வருகிறது.  

இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தின் முன்பகுதியில் உள்ள திறந்தவெளி நிலத்தில் கருணாநிதியின் வெண்கலச் சிலை வைக்க அனுமதிகோரி திமுக அறக்கட்டளை அறங்காவலர் சார்பில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதனை தொடர்ந்து தேனாம்பேட்டை மண்டல அலுவலர் சம்பந்தபட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை அளித்தார். இதையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை அமைக்க நிபந்தனைகளுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளனர்.

எதிர்காலத்தில் சாலை விரிவாக்கம் ஏதேனும் இருப்பின் இச்சிலை அகற்றப்பட வேண்டும் என்ற சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு கருணாநிதி சிலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் விரைவில் திமுக தலைவர் கருணாநிதி சிலை நிறுவப்பட உள்ளது. சிலை திறப்பு விழாவில், தேசிய தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

click me!