மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் சந்திரசேகர ராவ்... மூன்றாவது அணியில் சேர திமுக முயற்சியா?

By Asianet TamilFirst Published May 13, 2019, 8:14 AM IST
Highlights

இடைத்தேர்தல் பிரசாரத்தில் இருந்த ஸ்டாலின் சந்திரசேகரை சந்திக்கவில்லை. மேலும் காங்கிரஸ் அணியில் உள்ள திமுக, அதற்கு மாறாக அணி அமைக்க முயற்சி மேற்கொண்டிருக்கும் சந்திரசேகர ராவை சந்திப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.
 

காங்கிரஸ் - பாஜக அல்லாத மூன்றாவது அணி அமைக்க முயற்சி மேற்கொண்டிருக்கும் தெலங்கானா முதல்வரும் டி.ஆர்.எஸ். கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவ் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று மாலை சந்தித்து பேச உள்ளார். 
தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபாடு காட்டிவருகின்றன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைக்க தலைவர்களை சந்தித்துபேசிவருகிறார். தேர்தல் முடிவு அறிவிப்பதற்கு முன்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துவருகிறார்.
இதேபோல தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் - பாஜக அல்லாத மூன்றாவது அணியை அமைக்க முயற்சி செய்துவருகிறார். இதற்காக கடந்த வாரம் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திரசேகர ராவ் சந்தித்துபேசினார். இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்க சந்திரசேகர ராவ் முயற்சி செய்தார். 


ஆனால், இடைத்தேர்தல் பிரசாரத்தில் இருந்த ஸ்டாலின் சந்திரசேகரை சந்திக்கவில்லை. மேலும் காங்கிரஸ் அணியில் உள்ள திமுக, அதற்கு மாறாக அணி அமைக்க முயற்சி மேற்கொண்டிருக்கும் சந்திரசேகர ராவை சந்திப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது.


இந்நிலையில் மு.க.ஸ்டாலினை சந்திரசேகர ராவ் இன்று மாலை 4 மணி அளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சென்னைவரும் சந்திரசேகர ராவ் ஸ்டாலினுடன் ஆலோசித்துவிட்டு ஹைதராபாத் செல்வார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடந்த ஆண்டு சந்திரசேகர ராவ் ஸ்டாலினை சந்தித்தபோது தனது வீட்டில் அவருக்கு தடபுடல் விருந்து அளித்தார் ஸ்டாலின்.
காங்கிரஸ், பாஜக அல்லாத அணியை கட்டமைக்க முயற்சிசெய்துவரும் சந்திரசேகர ராவை  ஸ்டாலின் சந்திப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

click me!