
கேரளா மற்றும் மகாராஷ்டிராவுக்கான கொரோனா வைரஸ் தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தவும் மாநில சுகாதாரத் துறைக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் நிபுணர் குழு ஒன்றை மத்திய சுகாதாரத்துறை கேரளா மற்றும் மகாராஷ்டிராவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் நிபுணர்குழுகளுக்கு மாநில சுகாதார அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஆனால் மத்திய மாநில அரசுகள் எடுத்த பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் காரணமா கொரோனா வைரஸ் தாக்கம் கணிசமாக, படிப்படியாக குறைந்துள்ளது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மத்திய பிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் மட்டும் வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இவ் இரண்டு மாநிலங்களில் மட்டும் சுமார் 70 சதவீதம் அளவிற்கு நோய் தொற்று உள்ளது.
இந்நிலையில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவும், அம்மாநில சுகாதாரத் துறைக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கவும் நிபுணர் குழு ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அம்மாநிலங்களுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. மகாராஷ்டிராவுக்கான மத்திய குழுவில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் (என் சி டி சி) மற்றும் புதுடில்லி ஆர் எம் எல் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல் கேரளாவுக்கானா குழுவில் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மூத்த அதிகாரி மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை , புதுடெல்லி லேடி ஹார்டிங் மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த இரு குழுக்களும் மாநில சுகாதாரத் துறையுடன் இணைந்து பணியாற்றும் என்றும், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கும் என்றும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.