தமிழக மீனவர்களை விடுவிக்க ரூ.1 கோடி அபராதம்...! மத்திய அமைச்சருக்கு அதிரடியாக கடிதம் எழுதிய ஓபிஎஸ்..!

By Ajmal KhanFirst Published Apr 13, 2022, 11:01 AM IST
Highlights

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மத்திய வெளியுறுவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை கேட்டுக்கொண்டுள்ளார்.
 

மீனவர்களுக்கு அபராதம் தலா ரூ. 1கோடி

தமிழக மீனவர்கள் எல்லைதாண்டி மீன்பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கைது செய்யப்படும் மீனவர்கள் இலங்கையில் உள்ள சிறையில் அடைக்கப்படுகின்றனர். மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் நடவடிக்கையிலும் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தநிலையில் இலங்கை அரசின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிக்கையில் வெளியிட்டிருந்தார் அதில், மற்ற நாடுகளிடமிருந்து ராஜ தந்திர முறையில் நிதி உதவி கேட்டுப் பெற வேண்டும். அதைவிடுத்து, இதுபோன்று அநியாயமாக ஏழை மீனவ மக்கள் மீது தண்டம் விதிப்பது ஏற்கத்தக்கதல்ல. இதை ஏழை மீனவர்களால் செலுத்தவும் முடியாது. இலங்கைக்கு பல உதவிகளை செய்து கொண்டிருக்கும் நாடு இந்தியா. இப்படிப்பட்ட உதவி செய்கின்ற நட்பு நாடான இந்திய நாட்டு மீனவர்களிடம் ஒரு கோடி ரூபாய் கட்டணம் செலுத்தச் சொல்வதும், அவர்களைத் துன்புறுத்துவதும், சிறைபிடிப்பதும், அவர்களது படகுகளை பறிமுதல் செய்து எலத்தில் விடுவதும் செய்நன்றி மறத்தலாகும் என கூறியிருந்தார்.

மீனவர்களை விடுவிக்க வேண்டும்-ஓபிஎஸ்

இந்தநிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, இன்று  ஓ.பன்னீர் செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 23 ஆம் தேதி,  தமிழகத்தைச் சேர்ந்த அப்பாவி மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததாக  தெரிவித்துள்ளார்.  மேலும் கைது செய்யப்பட்டுள்ள  ஏழை மீனவர்களை விடுவிக்க, ஜாமீன் தொகையாக தலா ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். . இலங்கை நீதிமன்றத்தின் இந்தச் செயல் தமிழக மீனவர்களின் தண்டனையை அதிகப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.  இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு விடுவோமா என்ற அச்சத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதாக கூறியுள்ளார். இந்த நேரத்தில் மீனவர்களை விடுவிக்க தலா 1 கோடி ரூபாய் அபராதமாக கட்ட சொல்வது எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் இருப்பதாக கூறியுள்ளார். எனவே, தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க  நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக அந்த கடிதத்தில் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

click me!