மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்கிறது; பட்டியலிடுகிறார் ஜி.கே.மணி...

First Published Mar 23, 2018, 10:05 AM IST
Highlights
central government makes betrayal to the tamilnadu state GKMani ...


கரூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி காட்டமாக தெரிவித்தார்.

கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் கரூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நேற்று நடைப்பெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் தலைமை வகித்தார். இந்தக்  கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி பங்கேற்றுப் பேசினார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம், "தமிழக அரசு இன்று பல்வேறு உரிமைகளை இழந்து பெரும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளது. 

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று கூறுகிறது. தமிழக விவசாயிகளின் பட்டா நிலத்தை கையகப்படுத்த மத்திய அரசு நினைக்கிறது. 

வட மாநிலங்களுக்கு தமிழகத்தில் நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரத்தை கொண்டுச் செல்ல உயர் மின் அழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணிக்கு தமிழக விவசாய பட்டா நிலத்தை குறிவைத்து செயல்படுகிறது. 

அதே சமயம் கேரளா வழியாக செல்லும்போது குழாய் அமைத்து கொண்டு செல்ல முடிவு செய்துள்ளது. இதில் தமிழக மக்களை மத்திய அரசு கண்டுகொள்வது இல்லை.

தமிழக அரசு காவிரி ஆற்றில் அதிகமாக தடுப்பணை கட்ட வேண்டும். குறிப்பாக நெரூர், வாங்கல், புகழூர் ஆகிய பகுதிகளில் தடுப்பணை கட்ட தவறினால் விரைவில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். 

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி கட்ட வேண்டும். கரூரில் தற்போது மருத்துவ கல்லூரி பணி மெதுவாக நடைபெறுவதால் அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு வாடகை கட்டிடம் அமைத்து மாணவர் சேர்க்கை உடனே நடத்தப்பட வேண்டும். 

தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற உறுப்பினர்களும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்கிறது" என்று இவ்வாறு அவர் கூறினார்.
 

click me!