தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ தான் விசாரிக்கணும்!! உயர்நீதிமன்றம் அதிரடி

First Published Jun 18, 2018, 11:53 AM IST
Highlights
cbi has to inquiry tuticorin massacre said high court


தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதே உகந்ததாக இருக்கும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் 22ம் தேதி நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. ஆனால், சில சமூக விரோதிகள் போராட்டக்காரர்களுடன் புகுந்து வன்முறையை கட்டவிழ்த்து விட்டதால் தான் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிபிசிஐடி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான உண்மை தன்மையை அறிய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுதொடர்பான பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தடயவியல் நிபுணர்களை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு, உயர்நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடந்தது. 

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படுவதால், இதுபோன்ற விசாரணை தேவையில்லை என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. 

இதைக் கேட்ட தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை தமிழக போலீஸார் நடத்தியுள்ளதால், இதுதொடர்பாக சிபிஐ விசாரிப்பதுதான் சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தார். மேலும் இதுதொடர்பான தமிழக அரசின் கருத்தை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்யுமாறு கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார். 
 

click me!