
தருமபுரி
கர்நாடக மாநில தேர்தலுக்கு பிறகு பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார் என நம்புகிறோம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தர்மபுரியில் கூறினார்.
"மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வேண்டும்.
நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்க வேண்டும்" என்று வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் ஐயாக்கண்ணு மற்றும் விவசாயிகள் குமரி முதல் சென்னை வரை 100 நாட்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த பயண குழுவினர் நேற்று தர்மபுரி மாவட்டம் வந்தனர். சங்கத்தின் மாநில தலைவர் ஐயாக்கண்ணு தலைமையில் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு மக்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்தால் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் ஐயாக்கண்ணு விளக்கமளித்து பேசினார்.
இதனிடையே தருமபுரியில் அவர் செய்தியாளர்களிடம், "விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.
மரபணு மாற்றப்பட்ட விதைகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நாங்கள் கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறோம்.
67-வது நாளில் தருமபுரி வந்துள்ளோம். இன்னும் 33 நாட்கள் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சென்னை சென்று முதலமைச்சரை சந்திந்து தமிழகத்தில் விவசாயிகளுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்து மனு கொடுக்க உள்ளோம்.
தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான எண்ணேகொல் புதூர் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு போதிய நிதி ஒதுக்க வேண்டும். சின்னாறு அணையில் இருந்து வெளியேறும் உபரிநீர் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த உபரிநீரை இந்த மாவட்டத்தில் விவசாய பணிகளுக்காக பயன்படுத்திக் கொள்ள பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழ்நாட்டிற்கு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக அரசு காவிரி ஆற்றில் 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால், கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடவில்லை.
இது தொடர்பாக அந்த மாநில தலைமை செயலாளர் மீது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கர்நாடக மாநில தேர்தலுக்கு பின்னர் பிரதமர் மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பார் என நம்புகிறோம்" என்று ஐயாக்கண்ணு தெரிவித்தார்.