காவிரி மேலாண்மை வாரியம் கண்டிப்பாக அமைக்கவேண்டும் என்று போராடி வரும் தமிழர்கள், இந்த கோரிக்கைக்காக மறுக்க ராணுவமே வந்தாலும் நாங்கள் அஞ்சமாட்டோம் என நடிகர் சத்யராஜ் ஆவேசமாக பேசியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழ்த் திரையுலகினர் சென்னையில் மௌனப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, இளையராஜா, வைரமுத்து, விஷால், நாசர், வரலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சத்யராஜ், ‘நான் என்றுமே தமிழர்கள் மற்றும் தமிழ் உணர்வுகளின் பக்கம்தான் நிற்கிறேன். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால், சபை நாகரீகம் கருதி, நடிகர் சங்கம் எடுத்துள்ள முடிவுக்கு கட்டுப்பட்டு நான் அமைதியாக இருக்கிறேன் என தெரிவித்தார்.
இதையடுத்து வேண்டும் வேண்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே தீரவேண்டும். மூடுங்கள் மூடுங்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடுங்கள். தமிழர் உணர்வுகளை மதியுங்கள். எந்த அரசாக இருந்தாலும் அஞ்சமாட்டோம். ராணுவமே வந்தாலும் அஞ்சமாட்டோம். எந்தக் கெடுபிடிக்கும் அஞ்சமாட்டோம். குரல் கொடுங்கள்.. தைரியமுள்ளவர்கள் தமிழர்களின் பின்னால் நில்லுங்கள். இல்லாவிட்டால் ஓடி ஒளிந்துகொள்ளுங்கள்’ என முழக்கம் எழுப்பி நடிகர் சத்யராஜ் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்