
காவிரி நீரை முறையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். 2 நாட்களாக காவிரி டெல்டாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்தது மன நிறைவு மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான மகசூல் பெருக்கம் மகிழும் விவசாயிகள் என்கிற வாக்குறுதி எந்த அளவு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை காணவே சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். கடந்த ஓராண்டில் தமிழ்நாடு அரசு அறிவித்த திட்டங்களை நிறைவேற்றும் வகையில் உள்ளது.
7 உறுதிமொழிகளை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் உள்ளது. கடந்த ஆண்டு 4.90 ஆயிரம் ஏக்கர் குருவை சாகுபடி நடைபெற்றது. இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடியில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகின்றன. டெல்டா மாவட்டங்களில் 4,418 கி.மீ. தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் முடிவடைந்துள்ளன. தூர்வாரும் பணிகளால் வடகிழக்கு பருவமழையின் போது சம்பா பயிர்கள் மழைநீரில் மூழ்காமல் காக்கப்படும். மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி என்ற வாக்குறுதி செயல்படுத்தப்படுகிறது. வேளாண் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தோடு, யுரியா, DAP, பொட்டாஷ் ஆகிய உரங்கள் அடங்கிய தொகுப்பு ரூ.47 கோடி ஒதுக்கீட்டில் முழு மானிய விலையில் வழங்கப்படும்.
டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு தண்ணீர் கடைமடை வரை சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு நிர்ணயக்கப்பட்ட இலக்கை தாண்டி நெல் உற்பத்தியில் தமிழ்நாடு சாதித்தது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மே 24ம் தேதியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. காவிரி நீரை முறையாக பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும். நிதி நிலை சிரமத்தில் இருந்தாலும் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் 1 லட்சத்து 56 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறுகிறது. குறுவை தொகுப்பு திட்டம் மூலம் 3 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர். தமிழகம் தற்போது அமைதிப் பூங்காவாக இருக்கிறது. கலவரம், சாதி, மத மோதல், துப்பாக்கிச்சூடு தற்போது இல்லை என்று தெரிவித்தார். .