தமிழக ஆளுநர் பதவிக்கே செக் வைக்கும் வழக்கு.. காரசார விவதாம்.. தீர்ப்பை ஒத்திவைத்த ஹைகோர்ட்..!

By vinoth kumarFirst Published Dec 15, 2022, 3:48 PM IST
Highlights

ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்பதால் அவர் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. 

ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழு தலைவராக உள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதால்,  எந்த தகுதியின் அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க  உத்தரவிடக் கோரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


 
அந்த மனுவில், ஆரோவில் அறக்கட்டளை சட்டப்படி, தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டவருக்கு ஊதியம், படி, ஓய்வூதியம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்பதால் அவர் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனம் 158 (2) வது பிரிவின்படி, ஆளுநராக பதவி வகிப்பவர், ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்க கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதால், ஆரோவில் அறக்கட்டளை தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்து ஆர்.என்.ரவி, ஆளுநராக பதவியில் நீடிக்க தகுதியிழப்பு ஆகிறார் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆளுநர் மீது வழக்கு தொடர முடியாது என அரசியல் சாசனம் சட்டப்பாதுகாப்பு வழங்கியிருந்தாலும், அது ஆளுநர் என்ற பதவியின் செயல்பாடுகள் தொடர்பானது தான் என்றும், தனிப்பட்ட முறையில் அவரது செயல்பாடுகள் தொடர்பாக வழக்கு தொடர முடியும் எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும், ஆதாயம் தரும் பதவி வகிக்கும் ஆளுநர் ரவி, சட்ட விதிகளின்படி ஆளுநர் பதவியில் நீடிக்கிறாரா என விளக்கமளிக்க வேண்டும் எனவும், சட்ட விதிகளுக்கு முரணாக பதவியில் நீடிப்பதாக இருந்தால் அவரை தகுதி நீக்கம் செய்யலாம் எனவும் வாதிடப்பட்டது. பல மாநிலங்களில் ஆளுநர் விளக்கமளிக்க உயர் நீதிமன்றங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறி பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள்காட்டி மனுதாரர் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசரணைக்கு உகந்தது தானா என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

click me!