
மின் துறையில் முறைகேடு ?
தமிழக மின்சார வாரியம் 4,442 கோடி ரூபாய் மதிப்பிலான மின் திட்ட ஒப்பந்தத்தை அனைத்து விதிகளையும் மீறி நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டிருந்தார். மேலும் இந்த நிறுவனம் திமுகவுக்கு வேண்டிய நிறுவனம் எனவும் குறிப்பிட்டு இருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, பி.ஜி.ஆர் நிறுவனத்தில் கோபாலபுரம் நிதி முதலீடு செய்துள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை அவர் சொன்னார் என்பதை 24 மணி நேரத்துக்குள் அண்ணாமலை தெரிவிக்க வேண்டும் என கூறினார். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு இருந்தது. இந்தநிலையில் தமிழக ஆளுநர் ரவியை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மின்சாரத்துறை முறைகேடு தொடர்பாக புகார் அளித்திருந்தார்.
மின் தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை
இந்தநிலையில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் மின் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார். அப்போது கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில் மின் தேவை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். இதனால் மின் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார். நாளொன்றுக்கு 72,000 டன் நிலக்கரி மின் உற்பத்திக்கு தேவைப்படுவதாகவும், மத்திய அரசு 50,000 டன் நிலக்கரி மட்டுமே தரும் நிலையில் , முதற்கட்டமாக 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி செய்வதற்காக டெண்டர் விடப்பட்டு உள்ளதாக கூறினார். நிலக்கரி விலை சர்வதேச அளவில் அதிகரித்துள்ள நிலையில் , வெளிப்படையான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது தொடங்கப்பட்ட வடசென்னை அனல் மின் நிலைய திட்டபணிகள் , இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து உற்பத்தியை தொடங்கும் எனவும், செப்டம்பரில் சோதனை ஓட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
வேலை இல்லாதவர்கள் பற்றி பேச வேண்டாம்
ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்ய கூடிய நிலக்கரியை ஊழல் நடைபெற்று இருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றசாட்டு குறித்து கேள்வி எழுப்பியதற்கு, அண்ணாமலை வேலையில்லாமல் தன் இருப்பை காட்டி கொள்ள பேசி வருவதாகவும், வேலையில்லாதவர்களை பற்றியோ ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்துபவர்கள் பற்றியோ பேச வேண்டாம் என காட்டமாக தெரிவித்தார். மேலும் சிலர் சமூக வலைதளங்கள் மற்றும் வார நாளிதழ்கள் மூலம் தங்கள் இருப்பை காட்டி கொள்ள ஆதரமில்லாமல் குற்றம் சாட்டுவதாகவும் விமர்சித்தார்.