தமிழகத்தில் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும்... எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!

Published : Mar 28, 2022, 04:16 PM IST
தமிழகத்தில் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும்... எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!!

சுருக்கம்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்த வேண்டும் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 10 மாதங்களாக சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது. சமூக விரோதிகள் மற்றும் ஆளும் கட்சியினரின் கைகளில் தமிழகம் சிக்கி சீரழிந்து வருகிறது. தினமும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், செயின் பறிப்புச் சம்பவங்கள், போக்சோ குற்றங்கள் என்று நாளிதழ்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆளும் கட்சி நிர்வாகிகள் மற்றும் சமூக விரோதிகளால் கூட்டாக பாலியல் பலாத்காரத்திற்கு இளம் பெண்கள் ஆளாக்கப்படும் கொடுமை நாள்தோறும் அரங்கேறி வருகிறது. விருதுநகர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் நடைபெற்ற கூட்டு பலாத்காரத்தைத் தொடர்ந்து, கடந்த 23 ஆம் தேதி ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, பாளையம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் மார்ச் மாதம் 23 ஆம் தேதி ராமநாதபுரத்தை அடுத்த மூக்கையூர் கடற்கரைக்குச் சென்றுள்ளார். இவர்களை நோட்டமிட்ட ஐந்து ரவுடிகள், அந்த ஆண் நண்பரை தாக்கிவிட்டு, கூட வந்த மாணவியின் துப்பட்டாவால் அவரை கட்டிப்போட்டு, அவரின் கண் எதிரே மாணவியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்த மாணவியின் மொபைல் போன் மற்றும் கூட வந்த நபரின் தங்க பிரேஸ்லெட்டையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தால் மனம் உடைந்த ஆண் நண்பர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த மாணவி விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம் புகார் கொடுத்துள்ளார்.

சந்தேகப்பட்ட நபர்களைப் பிடிக்க உதவி ஆய்வாளர் சென்றபோது, ரவுடிகள் அந்த உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக செய்திகள் வந்துள்ளன. மேலும், மார்ச் மாதத்திலேயே திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சின்னக்கரை கிராமத்தில் உள்ள திமுக கிளைச் செயலாளர், 3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகவும் மதுரை, திருப்பரங்குன்றத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு திமுக கிளைச் செயலாளர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்த அவலத்தின் ஈரம் காயும் முன், நேற்று ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் கஞ்சா வியாபாரிகள் போலீஸ் மீது வெடிகுண்டு வீசி தப்பி இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. அரக்கோணம், திருமலை ஆச்சாரி தெருவைச் சேர்ந்த ரியாஸ் அகமது என்ற கஞ்சா வியாபாரி, அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த சுமார் நூறு நபர்களை கஞ்சா விற்பனையில் ஈடுபடுத்தி, கஞ்சா வியாபாரம் செய்து வந்த செய்தி அறிந்து, 27.3.2022 அன்று இவர்களைப் பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது சிறுவர்களைப் பயன்படுத்தி, குண்டு வீசி தப்பிச் சென்றுள்ளனர். இன்றைய நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் இச்செய்தி வெளிவந்துள்ளது. இந்த குண்டு வீச்சில் ஏழுமலை, சந்தோஷ் என்ற இரண்டு காவலர்களும், ஜெயசூர்யா என்ற நபர் உட்பட மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நேற்று, சென்னையில் துப்பாக்கியுடன் போதை மாத்திரை விற்பனை செய்து வந்த கும்பல் கைது என்று செய்தியும் வந்துள்ளது. சுமார் 100 நபர்களை பயன்படுத்தி சுதந்திரமாக ஒருவன் அரக்கோணம் முழுவதும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளான். தலைநகர் சென்னையில் துப்பாக்கி உதவியுடன் போதை மாத்திரை விற்பனையில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது. இச்சம்பவங்கள் ஓரிரு நாட்களில் ஆரம்பிக்கப்பட்டதாக இருக்க முடியாது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 10 மாத காலத்தில் போதை மருந்து வியாபாரிகள் மெல்ல மெல்ல வளர்ந்து சுதந்திரமாக வியாபாரம் செய்து வந்துள்ளனர் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இந்த சமூக விரோதிகளை கட்டுப்படுத்த இயலாதபடி, காவல் துறையினரின் கைகளைக் கட்டியது யார் என்று காவல் துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதனை விளக்க வேண்டும். தன்னுடைய அரசியல் ஆசான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மதுரை, கோரிப்பாளையம், வைகைக் கரையில் பிரம்மாண்டமான சிலையை நிறுவிய பெருமை மூக்கையா தேவருக்கு உண்டு. இப்படி பல பெருமைகளுக்குரியவரும், பிற்படுத்தப்பட்ட மக்களை தூக்கிவிட பாடுபட்டவரும், உறங்காப் புலி என பெருமையோடு அழைக்கப்பட்டவரும், வீரம் மிகுந்த மண்ணின் மைந்தருமான மறைந்த தியாகி பி.கே.மூக்கையா தேவரின் நூற்றாண்டு துவக்க விழா 04-04-2022 அன்று ஆரம்பிக்க இருப்பதால், அதனை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென்பதும், அவர் பிறந்த ஊரான பாப்பாபட்டியில் உள்ள அரசு கள்ளர் பள்ளிக்கு பி.கே. மூக்கையா தேவர் பெயரை சூட்ட வேண்டுமென்பதும் தென் தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது. இது தொடர்பாக, அப்பகுதி மக்களும், தியாகி பி.கே. மூக்கையா தேவர் நற்பணி மன்றத்தின் சார்பாகவும் என்னிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குறைந்த காலமே வாழ்ந்தாலும் நிறைந்த சாதனைகளைப் படைத்த மூக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக கொண்டாடுவதும், அவர் பிறந்த ஊரில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டுவதும் நாம் அவருக்கு செய்யும் மரியாதையாகும். எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, தென் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையினை கனிவுடன் பரிசீலித்து, தியாகி திரு. பி.கே. மூக்கையா தேவர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை அரசு விழாவாக கொண்டாடவும், அவர் பிறந்த ஊரான பாப்பாப்பட்டியில் உள்ள பள்ளிக்கு அவரது பெயரை சூட்டவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!