திருவாரூரில் போட்டியிடுவது குறித்து, வரும், 6ம் தேதி முடிவு செய்யப்படும் என, தமிழக பாஜக தலைவர், தமிழிசை தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்து மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன், சபரிமலைக்குள், இரு பெண்கள் நுழைந்துள்ளனர்.
இதற்கு, கம்யூனிஸ்ட் அரசு உதவியது, நாடு முழுவதும், கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது, சம உரிமை கிடையாது.'பாதுகாப்பு மகளிர் சுவர்' ஒன்றை, கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. இந்த போராட்டத்திற்கு மற்ற மதத்தினரை நிற்க வைத்து, இந்து மத உணர்வுகளை கொச்சைப்படுத்தி உள்ளனர்.
இதற்கு, கம்யூனிஸ்ட்களும், அவர்களுக்கு துணை போகிறவர்களும், பதில் சொல்ல வேண்டிய, கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், திமுக., - விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் என, அனைத்து கட்சியிலும், சபரிமலைக்கு செல்வோர் உள்ளனர். எனவே, அந்தந்த கட்சி தலைவர்கள் இதுகுறித்து கருத்து சொல்ல வேண்டும்.
ஆளுநர் உரையில், மத்திய அரசின் திட்டங்கள், மாநில அரசு திட்டங்களோடு இணைந்து, மக்களுக்கு எப்படி பலன் அளிக்கிறது என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வளர்ச்சி திட்டங்களை, மத்திய அரசு, தமிழக மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருப்பது நிரூபணமாகி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில், கஜா புயல் நிவாரணப் பணிகள் நடந்து வருகின்றன.
இடைத்தேர்தலால், இதற்கு இடையூறு ஏற்பட்டு விடக்கூடாது. திருவாரூரில் நாங்கள் போட்டியிடுவது குறித்து, வரும், 6ம் தேதி முடிவு செய்வோம் இவ்வாறு அவர் கூறினார்.