தைரியம் இருந்தால் கரூர் வந்து தடுத்து பார்க்கட்டும்...! அமைச்சருக்கு சவால் விடும் அண்ணாமலை...

By Ajmal KhanFirst Published May 24, 2022, 9:10 AM IST
Highlights

நெஞ்சில் தைரியம் இருந்தால் கரூர் வந்து தன்னை தடுத்து பார்க்கட்டும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திற்கு பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.
 

திமுக -பாஜக  மோதல்

திமுக- பாஜக இடையே கடந்த சில நாட்களாகவே மோதல் அதிகரித்துள்ளது. திமுக அரசு மீது தொடர் குற்றச்சாட்டுகளை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறிவருகிறார். முதலமைச்சர் துபாய் பயணம், மின் வாரியத்தில் ஒப்பந்தத்தில் முறைகேடு, கட்டுமான நிறுவன முறைகேடு என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது. தவறான தகவலை பரப்பும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது நஷ்ட ஈடு வழக்கும் தொடர்ந்துள்ளது. மேலும் பாஜக அதிமுக முன்னாள் அமைச்சர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தது. 

72 மணி நேரத்தில் முற்றுகை போராட்டம்

இந்தநிலையில் மத்திய அரசு பெட்ரோல்,டீசல் விலையை குறைத்திருந்த நிலையில், மாநில அரசுகளும் வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டிருந்தது.   திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி  பெட்ரோல்,டீசல் விலை குறைக்க வேண்டும் என்றும் இல்லையென்றால், 72 மணி நேரத்தில் குறைக்கவில்லை என்றால், கோட்டையை முற்றுகையிடுவோம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனைதொடர்ந்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் கடைவீதியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர். கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லையெனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்று அண்ணாமலை கூறியுள்ளார். அவ்ளோ தைரியமா? பாத்துடலமா? இது திமுக ஆட்சி. சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சவால் விட என்ன தகுதி இருக்கிறது. அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தை  தாண்ட முடியாது. என கூறியிருந்தார். 

தைரியம் இருந்தால் கரூர் வரட்டும்

இதற்கு பதில் அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,  தி.மு.க., ஆட்சியில் ரவுடிகள் தான் அமைச்சர்களாக இருக்கின்றனர் என்பதற்கு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நல்ல உதாரணம் எற கூறினார்.  அமைச்சர் போலவா பேசுகிறார்? கரூரை தாண்ட விட மாட்டாராம். இவர் என்ன, பேரி கார்டு'போட்டு தடுக்கும், 'செக்யூரிட்டி' வேலை பார்க்கிறாரா?  என கேள்வி எழுப்பியிருந்தார். அமைச்சரோ, அவரோடு எப்போதும் இருக்கும் அடியாட்களோ, ரவுடிகளோ, நெஞ்சில் தைரியம் இருந்தால், கரூர் வந்து என்னை தடுத்து பார்க்கட்டும்; அதன்பின், என்ன நடக்கிறது என்பது தெரியும் என கூறினார். தமிழகத்தில் தற்போது இருப்பது, பழைய பாரதிய ஜனாதா  என்ற நினைப்பில் அமைச்சர் பேசி இருந்தால், அதை உடனே மாற்றி கொள்ள வேண்டும் என அண்ணாமலை எச்சரித்திருந்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!