ஆக மொத்தத்தில் தளி தொகுதியில் தாமரை மலர்ந்தே தீரும் என்பது உறுதியாகி இருக்கிறது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக சட்டமன்றத்திற்குள் தங்களது உறுப்பினர்களை அனுப்பி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது பாஜக. தொகுதி பங்கீடு முடிந்த நிலையில், இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை அக்கட்சி. இடைப்பட்ட நேரத்தில் யார் யாருக்கு வெயிட் என்பதை ஆராய்ந்து வரும் பாஜக, எதிர் முகாமில் இருக்கும் பவர்புல்லான ஆட்களை தமது கட்சிக்கு இழுத்து வந்து அவர்களை தங்களது கட்சியின் வேட்பாளராக அறிவிக்கும் திட்டத்தில் இருக்கிறது.
அந்த வகையில் தளி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு இந்திய மார்க்சிஸ்ட் கட்சியில் இருக்கும் டி.ராமச்சந்திரனை தமது கட்சிக்கு இழுத்து வந்து அவரை வேட்பாளராக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது பாஜக. இந்த டி.ராமச்சந்திரன் சாதாரணமான ஆள் அல்ல. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 2006-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேட்சை வேட்பாளர் தளி தொகுதியில் வெற்றி பெற்ற ராமச்சந்திரன்தான்.
தளி சட்டமன்ற தொகுதியைப் பொறுத்தவரையில், இந்திய கம்யூனிஸ்ட், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுக்கும் சரிசமமான ஓட்டு வங்கி உள்ளது. திராவிடக் கட்சிகள் இதுவரை தளி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதே இல்லை.
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், வரகானப்பள்ளி என்னும் மலைக் கிராமத்தில் ஒரு சாதாரண வேளாண் குடும்பத்தில் பிறந்தவர். இவர் 1996 முதல் 2001 வரை நாகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். பின் 2001 முதல் 2006 ஆண்டுவரை கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத் குழுத் தலைவராக இருந்தார். இவர் மார்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினராக இருந்தார். 2006 ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு கேட்டார். ஆனால், கூட்டணியில் இந்தியப் பொதுவுடமைக் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டதால் இவருக்கு வாய்பு வழங்கப்படவில்லை. இதை ஏற்கமறுத்து தளி சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாகவே போட்டியிட்டு வென்றார். இதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதன் பிறகு இவர் எதிர்த்துப் போட்டியிட்டு வென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியிலேயே மீண்டும் இணைந்தார்.
மீண்டும் 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மார்கிஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு தளியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016–ம் ஆண்டு இவரை எதிர்த்து நின்ற திமுகவை சேர்ந்த ஒய்.பிரகாஷ் வெற்றிபெற்றார்.
இவர்மீது பெரியார் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளரான பழனி என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கழுத்தை அறுத்துக் கொன்றது, மார்க்சிய லெனினீய கட்சியில் மாவட்டச் செயலாளரான பாஸ்கர் என்பவர் கடத்திக் கொல்லப்பட்டது உட்பட மூன்று கொலை வழக்குகளும், 15 க்கும் மேற்பட்ட கொலை முயற்சி வழக்குகளும், கிரானைட் குவாரி முறைகேடு வழக்குகள் என பல வழக்குகள் உள்ளன. இந்த குற்றங்களுக்காக இவரும் இவரது மாமனார் லகுமையா உட்பட 17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார், பின் பிணையில் வெளியே வந்தார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் விசாரணையில் சுமார் 100 கோடி மதிப்பிலான கிரானைட் மோசடி செய்ததாக ராமச்சந்திரன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்நிலையில், இம்முறை பாஜக இவரை தமது கட்சிக்கு அழைத்து வந்து தளி தொகுதி வேட்பாளராக களமிறக்கத் திட்டமிட்டுள்ளது.
ஆக மொத்தத்தில் தளி தொகுதியில் தாமரை மலர்ந்தே தீரும் என்பது உறுதியாகி இருக்கிறது.