தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக கால் சுண்டு விரல்கூட பதித்துவிடக் கூடாது... சொல்கிறார் ப.சிதம்பரம்..!

By Asianet TamilFirst Published Mar 29, 2021, 8:56 PM IST
Highlights

தமிழகத்தில் 20 தொகுதிகளிலும் பாஜக கால் சுண்டுவிரலைக் கூட பதித்துவிடக் கூடாது. எல்லாத் தொகுதிகளிலும் பாஜக தோற்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
 

காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாங்குடி என்பவர் போட்டியிடுகிறார். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ப.சிதம்பரம் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சாக்கோட்டையில் ப.சிதம்பரம் தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், “இந்தத் தொகுதியில் அதிமுகவினர் தூக்கும் பல்லக்கில் ஒருவர் (ஹெச்.ராஜா)பவனி வருகிறார். தூக்குகிறவர்கள் கையை விட்டுவிட்டால், பல்லக்கு கீழே விழுந்துவிடும். அந்தப் பல்லக்கைத் தூக்கக்கூட பாஜகவில் ஆட்கள் கிடையாது. அதில் பவனி வரக்கூட பாஜகவுக்கும் தமிழகத்துக்கும் என்ன தொடர்பு?
இந்தியாவின் சுதந்திர போராட்டத்தில் பாஜகவும் ஆர்எஸ்எஸும்  பாடுபட்டதா? எதுவும் இல்லை. ஆங்கிலேயர்கள் ஆட்சி தொடர வேண்டும் என்று சொன்னவர்கள்தான் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். சுதந்திர போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சிறைக்கு போன காலத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் யாருமே சிறைக்குச் சென்றதில்லை. பாஜக தமிழ் மொழி, கலாசாரம், இனத்துக்கு பகையான கட்சி. முதல் ஆதாரக்கொள்கையாக இந்தி மட்டுமே ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்கிறது பாஜக. 
பாஜகவின் இரண்டாவது ஆதாரக் கொள்கை இந்தியா என்பது இந்து நாடு. மற்றவர்கள் இரண்டாம் தர குடிமக்கள் என்று நினைக்கிறார்கள். அனைத்து மதத்தினருக்கும் சிவப்பு ரத்தம்தான் ஓடுகிறது. அனைத்து மதத்தினரும் சேர்ந்து வாழ்வதுதான் இந்தியா என்ற நாடே. பாஜகவின் மூன்றுவது ஆதாரக் கொள்கை சனாதன தர்மம். அதுதான் மீண்டும் இந்தியாவை ஆள வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், சனாதன தர்மத்தை தமிழகம் எதிர்த்தே வந்துள்ளது என்பதுதான் வரலாறு. சனாதனத்தை ஒழிக்க பெரியாரும் காமராஜரும் 100 ஆண்டுகள் போராடினர்.
தமிழ் இனத்துக்கே இன்று ஒரு சவால் வந்துள்ளது. மிகுந்த எச்சரிக்கையோடு மக்கள் வாக்களிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் திமுக - அதிமுக இடையேதான் யுத்தம். அந்த யுத்தத்திற்கு அப்பால் மிகப்பெரிய நிழல் யுத்தமும் இருக்கிறது. 20 தொகுதிகளிலும் பாஜக கால் சுண்டுவிரலைக் கூட பதித்துவிடக் கூடாது. எல்லாத் தொகுதிகளிலும் பாஜக தோற்க வேண்டும்.” என்று ப.சிதம்பரம் பேசினார்.

click me!