
பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, இந்திரா காந்தி காலத்திய அவசர நிலையைவிட மோசமாக உள்ளது என்று பாஜகலிருந்து விலகிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கிலுள்ள தனது இல்லத்தில் யஷ்வந்த் சின்ஹா செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார். இந்த குற்றச் சாட்டுக்களை முன்வைத்த அவர்,“மத்தியில் இருக்கும் அரசால், நாட்டில்இருக்கும் எந்தச் சமுதாயமும் பாதுகாப்பாக உணரவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.“
நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படாமல் போனதற்கு மத்திய பாஜக அரசே முழுமுதற் காரணம்” என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ள அவர், உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம் மற்றும் ஊடகங்கள் என நாட்டின் முக்கியமான அமைப்புக்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிகளில் மோடிஅரசு இறங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மத்திய அமலாக்கத் துறை, வருமான வரித் துறை,சிபிஐ, என்ஐஏ போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர்களுக்குத் மத்திய அரசு தொந்தரவு அளித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தனது விமர்சனத்தில் இருக்கும் உண்மை பற்றி, பாஜக-விலுள்ள தலைவர்களே பலர் தன்னைத் தொடர்பு கொண்டு பேசிவருவதாகவும், மேலும் பலர் தங்களது குரலை வெளிப்படுத்தத் தைரியமற்று இருப்பதாகவும் கூறியிருக்கும் சின்ஹா,தேர்தல் அரசியலில் இருந்து விலகினாலும், விவசாயிகள்,முறைசாராத் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்காக, தான் தொடர்ந்து போராடுவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.