20 தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலா... இல்லை 234 தொகுதிக்கும் தேர்தலா..? எடப்பாடிக்கு பாஜக ரெட் அலர்ட்!

By vinoth kumarFirst Published Dec 12, 2018, 2:09 PM IST
Highlights

மக்களவை தேர்தலோடு 20 தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல். இல்லையெனில் 234 தொகுதிக்கும் தேர்தல்’ என டெல்லி மேலிடம் சொன்னதால் அதிர்ச்சியாகி எடப்பாடி அணிகள் இணைப்புக்கு இறங்கி வந்துள்ளதாகக் கூறுகிறார்கள் அமமுக நிர்வாகிகள்.

5 மாநில தேர்தல் முடிவுகளால் பதற்றத்தில் இருக்கிறது பாஜக. மக்களவை தேர்தல் எக்ஸ்பிரஸ் வேகத்தில் நெருங்கி வரும் வேளையில் ஆட்சியை தக்கவைத்தே ஆகவேண்டும் என்கிற முனைப்பில் இருக்கும் பாஜக பல அதிரடி வியூகங்களை வகுக்கத் திட்டமிட்டுள்ளது. தோல்வி தந்த பாடத்தால் காயம்பட்டிருக்கும் பாஜக மீண்டுவர எதிரிகளிடமும் இறங்கிவரத் தயாராகி விட்டதாகக் கூறுகிறார்கள். 

வடக்கு வலுக்கி விட்ட நிலையில் தெற்கை வலுவாக்க நினைக்கும் பாஜகவின் முதல் அசைன்மெண்ட் அதிமுக-அமமுக இணைப்பு. அது சாத்தியப்பட்டால் மட்டுமே கணிசமான தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் எனத் திட்டமிட்டுள்ளது பாஜக. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்கு முன் அமமுகவில், இருந்த தங்க தமிழ்செல்வன், ’அமமுக- அதிமுகவை இணைக்க பாஜக முயன்று வருகிறது’ எனக் கூறியிருந்தார். ஆனால், அதனை பாஜகவும், அதிமுகவும் மறுத்து இருந்தது. ஆனால், இப்போது அணிகள் இணைப்பில் பாஜக இரு தரப்பிற்கும் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதற்கு இசைந்து கொடுக்க எடப்பாடி பழனிசாமி மறுத்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. ‘அணிகளை இணைக்க சம்மதித்தால் மட்டுமே அதிமுக அரசையும், கட்சியையும் காப்பாற்றுவோம். மறுத்தால் பாதிப்பு உங்களுக்குத் தான்’’ என பாஜக மேலிடம் எடப்பாடி அரசுக்கு ரெட் அலர்ட் கொடுத்திருக்கிறது என்கிறார்கள். 

பாஜகவின் இந்த அதிரடிக்கு காரணம், மத்திய உளவுப்பிரிவு எடுத்த ரகசிய சர்வேயில் ’தேர்தல் வந்தால் டி.டி.வி.தினகரன் அணி கணிசமான வாக்குகளைப் பிரிக்கும். அதனால் சொற்ப இடங்கள் மட்டுமே அதிமுகவுக்கு கிடைக்கும்’ என்ற தகவல் கொடுக்கப்பட்டதாம். இந்தத் தகவல் முன்பே கொடுக்கப்பட்டிடுந்தாலும், ஐந்து மாநில தேர்தல் முடிவால், உடனடியாக இணைய வேண்டும் என இப்போது எடப்பாடிக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது டெல்லி மேலிடம். 

இது சக்சஸ் ஆனால், மக்களவை தேர்தலோடு 20 தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல். இல்லையெனில் 234 தொகுதிக்கும் தேர்தல்’ என டெல்லி மேலிடம் சொன்னதால் அதிர்ச்சியாகி எடப்பாடி அணிகள் இணைப்புக்கு இறங்கி வந்துள்ளதாகக் கூறுகிறார்கள் அமமுக நிர்வாகிகள். 

ஆரம்பத்தில் டி.டி,.வி.தினகரனை சேர்க்கமாட்டோம், சசிகலா குடும்பத்திற்கு இடமில்லை எனக்கூறி வந்த எடப்பாடி அனைவரையும் இணைத்துக் கொள்ள சம்மதித்திருப்பதாகவும் கூறுகிறார்கள். இதனால், பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக டி.டி.வி.தினகரன் உற்சாகத்தில் இருக்கிறார். காரணம் ’’அதிமுகவில் இணைந்தால் அண்ணன்தான் நாட்டமையாக இருப்பார். சசிகலா விடுதலையாவதி சிக்கல் இருக்காது. ஆகையால் அணிகள் இணைப்பு எப்போது எனக் காத்திருக்கிறார் டி.டி.வி.தினகரன். ஆனால், தினகரனின் வலது கரமாக இருந்த செந்தில் பாலாஜிக்கு இதில் உடன்பாடில்லை.

 

இதுபற்றி அவர், டி.டி.வி.தினகரனிடம் கேட்டிருக்கிறார். எப்போதும் ’நான் இருக்கிறவரை பாஜகவுடன் எந்த உறவும்  கிடையாது’ என்பவர் இப்போது மவுனமாக இருந்திருக்கிறார். இதனால் நொந்துபோன செந்திபாலாஜி, ’எந்தப் பலனும் இல்லாமல் அரசை ஆதரித்து ஓட்டுப் போட்டதோடு, பதவியையும் இழந்தோம். எங்களைப் பற்றி டி.டி.வி.தினகரன் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. பலன் கிடைக்கப்போகிறது என்றவுடன் மனது மாறி விட்டார்.

 

ஆனால் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் தற்போதைய நிலையில் மக்களிடம் நற்பெயரில்லை. தனியாக இருந்தால் சொல்லிக் கொள்ளும் வகையில் வெற்றி கிடைக்கும். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் அவரது நலனை மட்டும் பார்க்கிறார்’ என அவரது ஆதரவாளர்களிடம் புலம்பித் தவித்திருக்கிறார் செந்தில் பாலாஜி. திமுகவுக்கு தாவுவதாக பரவும் வதந்திகளை இந்த நிகழ்வால் செந்தில் பாலாஜி உண்மையாக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

click me!