BJP on Pongal gift : பொங்கல் பரிசு ரூ.5000 எங்கே விடியல் அரசே... போஸ்டர் அடித்து திமுக அரசை குடையும் பாஜக..!

By Asianet TamilFirst Published Jan 13, 2022, 10:46 PM IST
Highlights

அதிமுகவினர், “தங்கள் ஆட்சியில்  ரூ.2500 வழங்கியபோது, ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுகவினர் கோரினர். அதன்படி இந்தப் பொங்கலுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்றும் திமுக அரசு ஏமாற்றுவதாகவும்” விமர்சித்தனர்.

 பொங்கல் பரிசு தொகை ஐந்தாயிரம் ரூபாயைக் கேட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டியுள்ளது. 

பொங்கல் பண்டிகையொட்டி பொங்கல் பரிசு தொகுப்போடு 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டில் ரூ.1000, 2021-ஆம் ஆண்டில் ரூ.2500-ஐ அதிமுக அரசு வழங்கியது. இது தேர்தலுக்காக வழங்கப்பட்டதாக திமுக குற்றம் சாட்டி வந்தது. மேலும் தமிழகத்தில் 2020-இல் கொரோனா தொடங்கியது முதலே ரூ.5000 வழங்க வேண்டும் என்று திமுக கோரி வந்தது. ஆனால், அதிமுக அரசு ரூ.1000 மட்டும் வழங்கியதால், திமுக ஆட்சிக்கு வந்ததும் ரூ.4000 வழங்கப்படும் என்று அக்கட்சி  தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. அதன்படி திமுக ஆட்சிக்கு வந்ததும் மே, ஜூன் மாதங்களில் இரு தவணைகளாக ரூ.4000 வழங்கப்பட்டது.

இந்நிலையில் பொங்கல்  திருநாளையொட்டி திமுக அரசு ரொக்கப் பரிசு அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடத்தில் இருந்தது. ஆனால், பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு பை மட்டும் திமுக அரசு அறிவித்தது. இதனால், பொதுமக்கள் சற்று ஏமாற்றமடைந்தனர். ஆனால், அதிமுகவினர், “தங்கள் ஆட்சியில்  ரூ.2500 வழங்கியபோது, ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று திமுகவினர் கோரினர். அதன்படி இந்தப் பொங்கலுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்றும் திமுக அரசு ஏமாற்றுவதாகவும்” விமர்சித்தனர். இதேபோல் அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவும் அன்று ரூ.5000 வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்தியும் விமர்சித்தும் வந்தனர். 

ஏற்கனவே பொங்கல் பரிசில் புளியில் பல்லி இருந்ததாகவும், வெல்லம் உருகுகிறது என்றும் அதிமுக, பாஜக திமுக அரசை விமர்சித்தது. மேலும் இந்தப் பொருட்கள்  எங்கு கொள்முதல் செய்யப்பட்டன என்றும் இக்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்நிலையில் பாஜக செல்வாக்காக உள்ள கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாஜகவினர் பொங்கல் பரிசு கேட்டு போஸ்டர் அடித்துள்ளனர். மூலை முடுக்குகளில்கூட இந்த போஸ்டரை ஒட்டியுள்ள பாஜகவினர், அந்த போஸ்டரில் “‘தமிழக மக்களுக்கு போலியான வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியல் அரசே, பொங்கல் பரிசு ரூபாய் 5000 எங்கே?’ என கேள்வி எழுப்பியுள்ளது. இந்த போஸ்டர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

click me!