
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டுமென தமிழக அரசு சட்டமன்றத்தில் கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரானநாடு முழுவதும் அதிருப்தி அலை நிலவிவருகிறது. அந்த மூன்று சட்டங்களும் உணவு பாதுகாப்பை சீரழித்து விடும் என்றும், அச்சட்டங்கள் மூன்றும் முழுக்க முழுக்க தனியார் பெருமுதலாளிகளுக்கு சாதகமாக உள்ளது எனவும், ஆகவே இந்த மூன்று கருப்பு சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டக் காலத்தில் இதுவரை 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
திமுக தொடர்ந்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மு. க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில், விவசாயிகளுக்கு எதிரான இந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இன்று சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவாதம் நடந்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் விவசாயிகளின் நலனுக்கு எதிராக உள்ள வேளாண் சட்டங்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்களை இன்று அவையில் முன்மொழிந்தார். அதில், வேளாண் தொழில் பெருகவும் விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, இம்மாநிலத்தின் வரலாற்றில் முதல் முறையாக வேளாண்மைக்கு என தனி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து, வேளாண்மை துறையின் பெயரினை வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை என மாற்றி ஒரு உயர்ந்த குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஒன்றிய அரசு விவசாயிகள் நலனுக்கு எதிராக கொண்டு வந்த சட்டங்கள் முறையே விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வாணிபம் சட்டம்-2020 (ஊக்குவிப்பு மற்றும் உதவுதல்)
விவசாயிகள் விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் ஒப்பந்த சட்டம் (அதிகாரம் அளித்தல் மற்றும் பாதுகாத்தல் 2020) அத்தியாவசிய பொருட்கள் திருத்தம் சட்டம் 2020 ஆகிய மூன்று சட்டங்களும் நமது நாட்டின் வளர்ச்சிக்கும் விவசாயிகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை என்பதால் அவை ஒன்றிய அரசினால் ரத்து செய்யப்பட வேண்டும் என இந்த சட்டமன்றம் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப் படுகிறது என அதில் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
பின்னர் முதலில் பாஜக, பின்னர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என அடுத்தடுத்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த தீர்மானம் முன்மொழியப்பட்ட உடனேயே அதற்கு முதலில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்தே எதிர்ப்பு எழுந்தது. தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவாறே நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு சிறிது நேரத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளியேறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், வேளாண் பெருமக்கள் நல்ல முறையில் வாழ வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு வேளாண் சட்டங்களை இயற்றியுள்ளது.
அவர்களுக்கு உரிய அடிப்படை ஆதாரங்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரசு உள்நோக்கத்தோடு அச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. திமுக அரசின் இந்தத் தீர்மானம் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் எனக் கூறினார்.