மு.க. ஸ்டாலினுக்கு பாஜக திடீர் பாராட்டு.. காங்கிரஸுடன் ஏன் நட்பு என்றும் கேள்வி!

By Asianet TamilFirst Published Jun 29, 2020, 10:01 PM IST
Highlights

"சீனாவுக்கு ஆதரவாக உண்மையை திரித்துக்கூறி மக்களை குழப்பிவருகிறார் ராகுல் காந்தி. அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ராஜீவ் அறக்கட்டளை சீனாவுடன் என்ன ஒப்பந்தம் செய்தது, இந்த அறக்கட்டளைக்கு சீனா ஏன் நன்கொடை அளித்தது என்ற கேள்விகளுக்கு ராகுலிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.” என்று முரளிதர ராவ் தெரிவித்தார்.

சீன விவகாரத்தில் பிரதமர் எடுக்கு முடிவுகளுக்கு ஆதரவு தெரிவித்த திமுகவுக்கு பாஜக பாராட்டு தெரிவித்துள்ளது.


லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்கள் மீது சீனப் படையினர் நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  இந்த விவகாரத்தில் பாஜகவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துவருகிறது. இதற்கிடையே சீன விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது. இந்தக் கூட்டத்தில் சோனியா காந்தி உள்பட அகில இந்திய தலைவர்களும் தமிழகத்திலிருந்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுகவில்  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்றனர்.


இந்தக் கூட்டத்தில் மோடி அரசை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்து பேசினார். மோடி அரசின் மீது புகார்களையும் கூறினார். ஆனால், காங்கிரஸ் கூட்டணி கட்சியான திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், ‘சீன விவகாரத்தில் பிரதமர் மோடி எடுக்கும் முடிவுகளுக்கு திமுக ஆதரவு அளிக்கும்” என்று தெரிவித்தார். காங்கிரஸ் கூட்டணியில் உள்ள திமுக, பாஜகவைக் குறை எதுவும் கூறாமல் பேசியது காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்த திமுகவுக்கு பாஜக பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழக பாஜக ஏற்பாடு செய்த காணொளி பேரணியில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் பேசுகையில், “இந்திய ராணுவ வீரர்கள் இறப்புக்கு காரணமான சீன அரசுக்கு கண்டனம் தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன். ஆனால், எதிரி நாட்டுக்கு எப்போதும் ஆதரவாக செயல்படும் காங்கிரஸ் கட்சியுடன் திமுக ஏன் நட்புறவுடன் உள்ளது. சீனாவுக்கு ஆதரவாக உண்மையை திரித்துக்கூறி மக்களை குழப்பிவருகிறார் ராகுல் காந்தி. அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். ராஜீவ் அறக்கட்டளை சீனாவுடன் என்ன ஒப்பந்தம் செய்தது, இந்த அறக்கட்டளைக்கு சீனா ஏன் நன்கொடை அளித்தது என்ற கேள்விகளுக்கு ராகுலிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை.” என்று முரளிதர ராவ் தெரிவித்தார்.

click me!