Tamilnadu Rain | ரூ.5,000 நிவாரணம், பயிர்க்கடன் ரத்து.. மு.க.ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்!

By manimegalai aFirst Published Nov 15, 2021, 10:40 AM IST
Highlights

மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு பாஜக சார்பில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு பாஜக சார்பில் மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை வெள்ளத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை நடத்திய Boat Photoshoot ஒருபுறம் விமர்சனத்திற்கு உள்ளானாலும், மறுபுறம் அவர் அரசியல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அந்தவகையில் பாஜக-வின் மண்டல அளவிலான தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய பொதுச் செயலாளர் சி.டி ரவி, மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மதுரை, கோவை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய மண்டலங்களின் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பொறுப்பாளர் மற்றும் கட்சி தொண்டர்களுக்கும், மழை காலத்தில் மக்களுக்கான உதவிகளை சிறப்பாக செய்தவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெற இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணமாலை, தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மழை காரணமாக பல்வேறு இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஏராளமான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தம்ழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு தலா ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்துள்ளதால் அவர்கள் பெற்ற பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பயிர் காப்பீடு குறித்த செயல்முறையை தமிழ்நாடு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார். அதேபோல், சென்னையில் எதிர்காலத்தில் இதுபோல் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க மழை பாதிப்பு தொடர்பாக மாநில அரசு அமைத்த குழுவை பாஜக வரவேற்கிறது. சென்னையின் பாதுகாப்பு தொடர்பாக பாஜக சார்பிலும் சில கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்க இருக்கிறோம். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரியில் மூத்த தலைவர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் நானும் கன்னியாகுமரிக்கு செல்ல இருக்கிறேன் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

அண்ணாமலையை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக தேசிய பொது செயலாளர் சி.டி ரவி , மழை வெள்ள பாதிப்புகளை தமிழ்நாடு அரசு இன்னும் சிறப்பாக கையாள வேண்டும் என்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.‌ மேலும் சென்னை, கடலூர், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் மக்கள் வாழ்வாதாரத்தை காக்கவும், டெல்டா மாவட்டங்களில் விவசாய கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசு முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

வரும் 24 ஆம் தேதி பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா தமிழகத்தின் கோவை, திருப்பூர் , ஈரோடு மாவட்டங்களில் பாஜகவின் புதிய மாவட்ட கட்டிடங்களை திறந்து வைக்கவுள்ளார். மத்திய அமைச்சர் முருகன் தமிழக மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாகவும் சி.டி.ரவி, கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,  மத்திய அரசின் பீம யோஜனா திட்டம் மூலம் மக்கள் பயனடைந்து வருகின்றனர். சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு மூலம் நிவாரண நிதி கிடைக்கும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி காப்பீடு திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

click me!