தமிழக முதல்வர் ஸ்டாலினையும்,திமுக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து இருக்கிறார் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.பி கே.பி.இராமலிங்கம்.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாரணாசி விஸ்வநாதர் ஆலயம் தரிசனம் செய்தார். இதனை காணொலி காட்சியாக கேட்க பார்க்க நாமக்கல் நகர பா. ஜ. க சார்பில் திருச்செங்கோடு ரோடு சுப்புலக்ஷ்மி திருமண மண்டபத்தில் நேரலை காணொளி காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக வந்து இருந்த பாஜக மூத்த தலைவர் முன்னாள் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே. பி. இராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசிய போது, ‘திமுக தலைமையிலான தமிழக அரசு மிரட்டுகிற பாணியை கையில் எடுத்துள்ளது. இதற்கு பாஜக அஞ்சாது. தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான ஊடகங்கள் நடத்தும் விவாத மேடைகளில் பிரதமரை தரக்குறைவாக பேசுகின்றனர். அந்த சமயங்களில் தமிழக அரசு ஏன் வழக்கு போடவில்லை. திமுக தலைமையிலான அரசு விமர்சனத்திற்கு அஞ்சுகிறது. பத்திரிக்கையாளரகள், சமூக ஊடகவியலாளர்களை கைது செய்கின்றனர்.
அவர்கள் தெரிவிக்கும் கருத்தில் உண்மையில்லையெனில் அதுகுறித்து கருத்து தெரிவித்துவிட்டுச் போகலாம் மு.க ஸ்டாலின் எதிர் கட்சியில் ஒரு கருத்து சுதந்திரம். முதல்வராக இருந்தால் ஒரு கருத்து சுதந்திரம், அவருக்கு இரண்டு கருத்து சுதந்திரமா?. சமூக ஊடகவியலாளர்களை கைது செய்வதால் அவர் சொன்னது உண்மையில்லை என்றாகிவிடுமா ? திமுக தலைமையிலான அரசு மிரட்டுகிற பாணியை கையில் எடுத்துள்ளது. திமுக மிரட்டுகிற நிலையில் பாஜக இப்போது இல்லை’ என்று கூறினார்.