தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கனவில் பாஜக... கனவை முளையிலேயே கிள்ளி எறியும் அதிமுக...!

By Asianet TamilFirst Published Nov 2, 2020, 8:45 PM IST
Highlights

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கனவில் பாஜக உள்ள நிலையில், கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை என்று அதிமுக விளக்கம் அளித்துள்ளது. 
 

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ளன. அதிமுக முதல்வர் வேட்பாளரை அறிவித்து, தேர்தலுக்காக தயாராகிவருகிறது. இதேபோல திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, விளம்பரக் குழு, ஆன்லைனில் தேர்தல் பிரசாரக் கூட்டம் என தேர்தல் களத்தை சூடாக்கிவருகிறது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டாலும், முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமைதான் அறிவிக்கும் என்று பாஜகவினர் பேசிவருகிறார்கள்.


மேலும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் பாஜக பங்கு வகிக்கும் என்றும், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் தமிழக பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்கள். அப்படியானால் அதிமுக கூட்டணி ஆட்சிக்கு தயாராகிவருகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அதிமுக செய்தித்தொடர்பாளர் வைகைசெல்வன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
 “தமிழக மக்கள் எப்போதுமே தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவே வாய்ப்பு தருவார்கள். அதற்கு வாய்ப்புள்ள கட்சிக்குத்தான் வாக்களிப்பார்கள். தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்தது இல்லை. இனி அமையப் போவதும் இல்லை. காங்கிரஸ், திமுக, அதிமுக என எதுவாக இருந்தாலும் தனிக்கட்சி ஆட்சிதான் அமைந்திருக்கிறது. கடந்த 2006-ல் திமுக 96 இடங்களில் மட்டுமே வென்றாலும்கூட, காங்கிரஸுடன் அதிகாரத்தைப் பகிரவில்லை. தமிழகத்தில் கூட்டணி என்பது தேர்தல்களுக்காகவே மட்டுமே இருந்துள்ளது. எதிர்காலத்திலும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வாய்ப்பில்லை” என்று தெரிவித்துள்ளார்.

click me!