வேட்பாளர்களை விடாமல் விரட்டும் கொரோனா... பாஜக நட்சத்திர வேட்பாளரை பாடாய்படுத்தும் தொற்று...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 11, 2021, 11:25 AM IST
Highlights

சூறாவளி பிரச்சாரம் செய்தவர்களை எல்லாம் சுழட்டிப்போட்ட கொரோனா வைரஸ், தேர்தலுக்குப் பிறகாவது சற்றே அமைதியாகும் என காத்திருந்த வேட்பாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நல்ல முறையில் நிறைவடைந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது எவ்வித அரசியல் கட்சி பாகுபாடுகளும் இல்லாமல் வேட்பாளர்களை துரத்தி, துரத்தி தொற்றிய கொரோனா வைரஸால் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேட்பாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அவர்கள் இல்லாமல் வாக்கு சேகரிப்பு, பிரச்சார கூட்டங்கள் நடந்த தேர்தலாகவும் இது தான் இருந்தது. 


சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் அண்ணா நகர் தொகுதி வேட்பாளர் பொன்ராஜ், வேளச்சேரி தொகுதி வேட்பாளரான சந்தோஷ் பாபு,  சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவரா, விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி, திருவள்ளூர் அமமுக வேட்பாளர் குரு, திமுகவை பொறுத்தவரை குறிஞ்சிபாடி தொகுதி வேட்பாளர் பன்னீர்செல்வம், அம்பத்தூர் வேட்பாளர் ஜோசப் சாமுவேல், பாபநாசம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளரும், மமக தலைவருமான ஜவாஹிருல்லா ஆகியோருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், திமுக எம்.பி. கனிமொழி ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பூரண குணமடைந்து வீடு திரும்பினர். சூறாவளி பிரச்சாரம் செய்தவர்களை எல்லாம் சுழட்டிப்போட்ட கொரோனா வைரஸ், தேர்தலுக்குப் பிறகாவது சற்றே அமைதியாகும் என காத்திருந்த வேட்பாளர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியான செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.  ஸ்ரீபெரும்புதூர்  தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய  கு.செல்வப்பெருந்தகை, பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமார், தியாகராய நகர் தொகுதி திமுக வேட்பாளார் ஜெ.கருணாநிதி ஆகியோருக்கு தேர்தலுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழக பாஜக துணை தலைவரும், அரவக்குறிச்சி பாஜக வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, “எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன்.  கடந்த காலங்களில் என்னை தொடர்பு கொண்டவர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

click me!