Congress Vs Bjp : காங்கிரஸ் டயர், டியூப் இல்லாத கட்சியா ? அப்போ உங்க கட்சி..? கடுப்பான கே.எஸ்.அழகிரி

By Raghupati RFirst Published Dec 15, 2021, 7:12 AM IST
Highlights

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும் மாறி மாறி சண்டை போட்டுக்கொள்வது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த வாரம், ‘காங்கிரஸ் கட்சியின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் முரசொலி பத்திரிகையில் ‘இந்தியாவின் அடுத்த ஆளுமை நம்முடைய தளபதி ஸ்டாலின்தான்’ என்று எப்போது எழுதினாரோ, அப்போதே தமிழக காங்கிரஸ் கட்சி செயலிழந்துவிட்டது. அதுமட்டுமின்றி அவரே ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. டயர், டியூப் கூட இல்லாத கட்சியாக காங்கிரஸ் உள்ளது. எங்களுக்கு உண்மையான சமூகநீதி என்றால் பாரதப் பிரதமர் நரேந்திர மோடிதான். உண்மையான சமூகநீதிக்கு வித்திட்டவர் அவர்தான்”என்று கூறியிருந்தார்.


மேலும், நேற்று நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ‘தமிழகத்தில் காங்கிரஸ் என்று ஒரு கட்சியே கிடையாது. அது திமுகவின் குரலாகவே ஒலிக்கிறது. மோடி எதிர்ப்பு என்கிற ஒற்றை புள்ளியில் திமுகவை ஆதரிக்கிறது. எனவே பேசாமல் திமுகவுடன் காங்கிரஸ் கட்சியை இணைத்துவிடலாம்’ என கடுமையாக விமர்சித்திருந்தார்.

Latest Videos

டயர், டியூப் இல்லாத கட்சி காங்கிரஸ் என்று அண்ணாமலை விமர்சித்தபோது கேஎஸ் அழகிரிக்கு வராத கோபமும், ரோஷமும் திமுகவுடன் காங்கிரசை இணைத்து விடலாம் என்று சொன்னவுடன் வேகமாக வெளி வருவதை காண முடிகிறது. தமிழக பாஜக தலைவரின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கே எஸ் அழகிரி நேற்று தனது டுவிட்டரில் அடுத்தடுத்து மூன்று பதிவுகளை வெளியிட்டார்.

‘கடந்த 2019 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வி அடைந்த பாஜக, 2021 சட்டமன்ற தேர்தலில் 23 இல் போட்டியிட்டு 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. முன்னாள், இந்நாள் தலைவர்கள் தோல்வியடைந்ததை மறந்து பேசலாமா? ஆனால் மக்களவையில் 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களிலிலும், சட்டமன்றத்தில் 25 இடங்களில் போட்டியிட்டு 18 இடங்களிலும் வெற்றிபெற்று தமிழ்நாடு காங்கிரஸ் சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தில் காங்கிரசே இல்லை என்று கூறுகிற அண்ணாமலை இத்தகைய குதர்க்க பேச்சுகளின் மூலம் மலிவான விளம்பரத்தை தேட முயல்கிறார். வேண்டாம் விபரீதம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் , காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும் இடையே அடிக்கடி நடக்கும் இந்த வார்த்தை போர் எப்போது முடியும் என்று தெரியவில்லை.

click me!