முப்படைகளின் தலைமைப் தளபதியாக பிபின் ராவத் நியமனம்: யார் இந்த பிபின் ராவத்?

By Selvanayagam PFirst Published Dec 30, 2019, 11:19 PM IST
Highlights

இந்தியாவில் உள்ள முப்படைகளின் முதலாவது தலைமைப் தளபதியாக பிபின் ராவத் இன்று நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தனித்தனியாக தளபதிகள் இருந்தபோதிலும் முப்படைகளுக்கும் சேர்த்து தலைமைத் தளபதி இல்லை. இந்த முப்படைகளுக்கும் தலைமைத் தளபதிய நியமிக்க மத்திய அரசு நீண்டகாலமாக ஆலோசித்து வந்தது.
இது தொடர்பாக கடந்த இரு நாட்களுக்கு முன்பு கூடிய பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை முப்படைகளுக்கும் தலைமைத் தளபதியை நியமிக்க ஒப்புதல் அளித்தது. 

மேலும், தலைமைத் தளபதி 65 வயதுவரை பதவியில் நீடிக்கலாம் என்று மத்திய அரசு விதிகளை மாற்றியது தற்போது ராணுவத் தளபதியாக இருக்கும் பிபின் ராவத், இன்று பதவி ஓய்வு பெறவுள்ளார். இந்தநிலையில், முப்படையின் முதல் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். 

நான்கு நட்சத்திரம் தகுதி கொண்ட இந்தப் பகுதி பாதுகாப்புப் படை முழுவதுக்குமான தலைவர் ஆவர். மேலும், அணு ஆயுதம் தொடர்பான உத்தரவிடும் அதிகாரிக்கான ஆலோசகராகவும் இவர் செயல்படுவார்.

தற்போது பிபின் ராவத்தின் வயது 61. முப்படையின் தலைமைத் தளபதியாக அதிகபட்சமாக 65 வயது பணியாற்றலாம் என்று விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. 

இருப்பினும், ஒருவர் எத்தனை ஆண்டுகாலம் தலைமைத் தளபதியாக பணியாற்றலாம் என்று முடிவு செய்யப்படவில்லை.
பிபின் ராவத் குறித்த சில முக்கியத் தகவல்கள்….

1.    ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வார்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். அவர் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார்.

2.    டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை அவர் வகித்தார். மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராக அவர் பணியாற்றினார். ராணுவ செயலர் பிரிவில், துணை ராணுவ செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் ராணுவ செயலாளராக பிபின் ராவத் பணியாற்றினார்.

3.    வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார். அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத் பங்கெடுத்துள்ளார்.

4.    ஜெனரல் பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப்பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார்.

click me!