பன்வாரிலால் புரோஹித்துக்கு வழியனுப்பு... புதிய ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வரவேற்பு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு!

By Asianet TamilFirst Published Sep 10, 2021, 9:19 AM IST
Highlights

தமிழகத்திலிருந்து செல்லும் பன்வாரிலால் புரோஹித்தை வழியனுப்பியும் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை வரவேற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
 

தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் செயல்பட்டு வருகிறார். கடந்த 2017-ஆம் ஆண்டு தமிழகத்தில் நியமிக்கப்பட்ட பன்வாரிலாலுக்கு பஞ்சாப் மாநில ஆளுநர் பொறுப்பு கூடுதலாக அண்மையில் வழங்கப்பட்டது. மேலும் சண்டிகர் ஒன்றிய பகுதியின் நிர்வாகியாகவும் பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து பன்வாரிலால் புரோஹித்தை விடுவித்து, புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் பன்வாரிலால் புரோஹித்துக்கு வழியனுப்பியும் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை வரவேற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். முதல் பதிவில், “தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆர்.என்.ரவிக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது!” என்று தெரிவித்துள்ளார்.


இன்னொரு ட்விட்டர் பதிவில், “பஞ்சாப் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்க இருக்கும் பன்வாரிலால் புரோகித்தை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்!தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர். இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!” என்று ட்விட்டரில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

click me!