
ஆன்லைன் ரம்மி தடை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது, அவசர சட்டம் இயற்றுவது குறித்து முக்கிய முடிவு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்படுகிறது. எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- இத்தனை குடும்பம் நடுத்தெருவில் வந்தும் எதுக்கு தயக்கம்! துணிச்சல் இல்லாத ஸ்டாலின் அரசு! கடுப்பாகும் அன்புமணி
இதனையடுத்து ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி 701 பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக முதல் அமைச்சரிடம் கடந்த மாதம் 27-ம் தேதி தாக்கல் செய்தது. இதனிடையே, ஆன்லைன் விளையாட்டு பற்றிய கருத்துக்களைப் பகிர விரும்பும் பொதுமக்கள் homesesi@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் கருத்து தெரிவிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க;- பிரபுவின் கதை தான் வேதனையான எடுத்துக்காட்டு.. எதுக்கு தடை செய்ய தயங்குறீங்க.. ராமதாஸ் காட்டமான கேள்வி.!
இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டம் இயற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை, காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தை இயற்றுவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.