
மலேசியாவுக்கு சென்ற மதிமுக பொது செயலாளர் வைகோவை, ஆபத்தானவர்கள் பட்டியலில் அவர் பெயர் இருப்பதால், அந்த நாட்டில் அனுமதிக்க முடியாத என கூறி, விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மலேசியாவின் பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களுடைய மகள் திருமண வரவேற்பு ஜூன் 10 சனிக்கிழமை மாலை பினாங்கில் நடைபெறுகிறது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வைகோ, மலேசியாவுக்கு புறப்பட தயார் ஆனார். இதற்காக, சென்னையில் உள்ள மலேசிய தூதரகத்தில் வைகோ விசா கேட்டு விண்ணப்பித்தார். மலேசிய தூதரகம் கடந்த வாரமே வைகோவுக்கு விசா வழங்கி விட்டது.
அதன்பேரில் மதிமுக பொது செயலாளர் வைகோ, நேற்று இரவு மலேசியவுக்கு புறப்பட்டு சென்றார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் விமானம் தரையிறங்கியதும், வைகோ சக பயணிகளுடன் வெளியே சென்றார்.
அப்போது, அவரி சோதனை செய்த மலேசிய குடியுரிமை அதிகாரிகள், வைகோவை மலேசிய நாட்டில் அனுமதிக்க முடியாது என தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதுபற்றி கேட்டபோது, உலகில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஆபத்தானவர்கள் பட்டியிலில் வைகோ பெயர் இடம் பெற்றள்ளதாகவும், இலங்கையில் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால், அவரை அனுமதிக்க முடியாது என கூறியுள்ளனர்.
மேலும், அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த அதிகாரிகள், இன்று இரவு 10.45 மணிக்கு இந்தியா புறப்படும் விமானத்தில் அவரை அனுப்பி வைப்பதாக கூறினர். இதையடுத்து, அங்கு பயணிகள் ஓய்வறையில் வைகோ தங்க வைக்கப்பட்டுள்ளார்.