AIADMK:முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்.. திமுகவிற்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்.!

By vinoth kumarFirst Published Jan 12, 2022, 1:27 PM IST
Highlights

 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசிடம் ஏன் ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர்களை துன்புறுத்தினீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அவ்வளவு அவசரமாக அவரை கைது செய்ய வேண்டிய காரணம் என்ன? அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டது. 

அரசு வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி,  ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக சுமார் ரூ.3 கோடி வரை  பணம் பெற்றுக்கொண்டு  மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது புகார் எழுந்தது.  புகாரின் பேரில் விருதுநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து கைதாவதிலிருந்து தப்பிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  

இதனையடுத்து அவர் தலைமறைவானார். இதனையடுத்து 8 தனிப்படைகள் அமைத்து  அவரை காவல் துறையினர் தேடி வந்தனர். இதற்கிடையே அவர் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதற்கு,  தங்களிடம் கருத்து கேட்காமல்  ராஜேந்திர பாலாஜிக்கு  ஜாமீன் வழங்கக்கூடாது  என தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது. இதனையடுத்து பலர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்தனர். கடலோர பகுதிகள், வெளி மாநிலங்கள் என தொடர்ந்து தேடுதல் வேட்டையில்  ஈடுபட்டு வந்த காவல் துறையினர் அவரை , ஜனவரி 5 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் ஹசன் பகுதியில்  வைத்து கைது செய்தனர். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்  ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் அதாவது ஜனவரி 20 ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த முறை ஜாமீன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டிருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு சார்பில் ராஜேந்திர பாலாஜி ஏராளமான புகார்கள் வந்திருக்கிறது. இவையெல்லாம் ஒரு பக்கம் சென்றுக்கொண்டிருந்த போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசிடம் ஏன் ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர்களை துன்புறுத்தினீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அவ்வளவு அவசரமாக அவரை கைது செய்ய வேண்டிய காரணம் என்ன? அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பப்பட்டது. 

இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை வழங்கியுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜேந்திர பாலாஜி பாஸ்போர்ட் மாஜிஸ்திரேடிடம் ஒப்படைக்க வேண்டும். குறிப்பாக விருதுநகர் பகுதியை விட்டு வேறு எந்த பகுதிக்கும் செல்லக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

click me!