தமிழகத்தில் மாநகராட்சி, நகராடசி, பேரூராட்சி பகுதிகளில் வாடகைதாரர் குடியிருப்புக்கு 100 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்ட சொத்துவரியை 50 சதவீதமாக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1998-ம் ஆண்டுக்கு பிறகு பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 17-ந்தேதி 2 வாரங்களுக்குள் சொத்து வரிகளை உயர்த்த முடிவு எடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சொத்து வரியை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது.
தமிழ்நாட்டில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பிற மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி பொது சீராய்வை 2018-19-ம் ஆண்டின் முதலாவது அரையாண்டு முதல், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசாணைப்படி, உரிமையாளர் குடியிருப்புகளுக்கு 50 சதவீதத்திற்கு மிகாமலும், வாடகைதாரர் குடியிருப்புகளுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமலும், குடியிருப்பு அல்லாத கட்டிடங்களுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமலும் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டது.
இதற்கு கடும் எத்ர்ப்பு எழுந்தது. வாடகைதாரர் குடியிருப்புகளுக்கு 100 சதவீதத்திற்கு மிகாமல் சொத்து வரி சீராய்வு செய்தது குறித்து பொதுமக்கள், பல்வேறு குடியிருப்பு பொது நலச்சங்கங்கள், பல்வேறு நல அமைப்புகள் இதனை உடனடியாக குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனிடையே பொது மக்களின் கோரிக்கைகளை அரசு கனிவுடன் பரிசீலித்து, சென்னை மாநகரம் மற்றும் பிற நகர் பகுதிகளில் பல்வேறு குடியிருப்புகளில் வசிக்கும் வாடகைதாரர்களுக்கு கூடுதல் நிதி சுமை இருக்கும் என்பதாலும், வாடகை குடியிருப்புகளுக்கான வரி உயர்வு 100 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் உரிமையாளர் குடியிருப்பு மற்றும் வாடகைதாரர் குடியிருப்பு இரண்டிற்கும் சொத்து வரி ஒரே விகிதத்தில் அதாவது 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.