உணர்ச்சிவசப்பட்டு சொல்லிட்டேன்.. பல்டி அடித்த ரஜினிகாந்த்.! தூத்துக்குடி சம்பவத்தில் 'திடீர்' திருப்பம் !

By Raghupati RFirst Published May 18, 2022, 5:06 PM IST
Highlights

தூத்துக்குடியில் இயங்கி வந்த காப்பர் உருக்கு ஆலையால் அப்பகுதி மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கொடிய பாதிப்புகள் ஏற்படுவதாக கூறி பல நாட்களாக அப்பகுதி மக்கள், சுற்றுச்சூழல் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் ஏராளமான எதிர்க்கட்சிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். தேசியளவில் கவனம் ஈர்த்த இந்த போராட்டத்தின் 100 வது நாளான மே 22 2018 அன்று ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. 

இந்த ஆணையம் கடந்த 3 ஆண்டுகளில் 36 கட்டங்களாக நடத்திய விசாரணையில், 1,426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 1,048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதியப்பட்டது.  இந்த ஆணையத்தின் கடைசி கட்ட விசாரணையில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. விஜயகுமார், முன்னாள் டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். 

இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க ஸ்டாலினிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தது. இது குறித்து அருணா ஜெகதீசன் இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது, 'தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை பொறுத்த வரைக்கும் விசாரணை வெளிப்படையாக இருந்தது.  அதே நேரம் ரகசிய தன்மை பாதுகாக்கப்படும் விதமாகவும் இருந்தது. இந்த விசாரணையில்  பாதிக்கப்பட்ட நபர்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்தார்கள். 

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஐந்து பாகங்கள் கொண்ட அறிக்கையை தயார் செய்து முதல்வரிடம் தாக்கல் செய்திருக்கிறோம்.  முதல் இரண்டு பாகத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விளக்கமாக தெரிவித்திருக்கிறோம்.   மூன்றாவது பாகத்தில் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. நான்காவது பாகத்தில் இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு என்ன மாதிரியான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து பரிந்துரை செய்திருக்கிறோம்.  

ஐந்தாவது பாகத்தில் 1500 வீடியோ ஆவணங்கள்,  1250 சாட்சிகள்,  1500 போலீசாரிடம் மொத்தமாக விசாரணை நடந்திருக்கிறது என்பது குறித்த விளக்கங்கள் உள்ளன. துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்திருக்கிறோம்' என்று கூறினார். மேலும் பேசிய அவர் ரஜினிகாந்த் தெரிவித்த சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் கூறினார். 'இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்டோம். அதற்கு அவர்,   தனக்கு இந்த விவகாரத்தை பொருத்தவரைக்கும் எதுவும் தெரியாது.  தொலைக்காட்சியை பார்த்து உணர்ச்சி வசப்பட்டு சில கருத்துக்களை சொல்லிவிட்டேன் என்று விளக்கம் அளித்திருக்கிறார்' என்று கூறினார்.

இதையும் படிங்க : பாமக முக்கிய பிரமுகரை தட்டி தூக்கிய அண்ணாமலை.! பாஜக போட்ட ஸ்கெட்ச்.. இது நம்ம லிஸ்ட்ல இல்லையே !

இதையும் படிங்க : ஷாக்கிங் நியூஸ்! சென்னை மெரினாவில் தோண்ட தோண்ட சாராய குவியல் - போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி !

click me!