மத்திய நிதி அமைச்சர் ஜெட்லி உடல்நிலை குறித்து மீடியாக்களில் வெளியான செய்தி தவறானது என்றும் ஆதாரமற்றது எனவும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி, மத்திய நிதி மற்றும் கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சராக உள்ளார். மாநிலங்களவை எம்.பி.,யான இவர்,இந்த முறை தேர்தலில் போட்டியிடவில்லை. மிகவும் நலிவடைந்துள்ள, அருண் ஜெட்லி சிகிச்சை பெறுவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் அவர், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று திரும்பினார். தற்போது பிரதமர் மோடி தலைமையில், மத்தியில் மீண்டும், பாஜக அரசு அமைய உள்ளது. அதில், அருண் ஜெட்லி இடம் பெற மாட்டார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் மீடியாக்களில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், மத்திய அரசின் செய்தி தொடர்பாளர் சிதான்ஷூ கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மீடியாக்களில் வெளியாகும் தகவல் தவறானது. ஆதாரமற்றது. வதந்திகளில் இருந்து தள்ளி இருக்கும்படி கேட்டு கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சிகிச்சைக்காக அருண் ஜெட்லி விரைவில் இங்கிலாந்து அல்லது அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.