
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள் சாமியை நேரில் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஜெயலலிதாவின் மறைவு தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆணையம் தீவிரமான விசாரணையை மேற்கொண்டு வருகிறது. ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்கள், ஜெயலலிதாவுடன் வசித்தவர்கள், அவரது உதவியாளர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என அனைவரிடமும் விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.
முன்னாள் தலைமை செயலாளர்கள் ராம மோகன ராவ், ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தீபாவின் கணவர் மாதவன், தீபாவின் சகோதரர் தீபக், திமுகவைச் சேர்ந்த சரவணன் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளது. இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா, தினகரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளனர்.
இந்நிலையில், ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள் சாமிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதாவின் இசட் பிளஸ் பாதுகாவலராக இருந்தவர் பெருமாள் சாமி. ஜெயலலிதாவின் கண்ணசைவை புரிந்துகொண்டு செயல்படுபவர் பெருமாள் சாமி என்று கூறப்படும். முதுமலையில் ஒருமுறை குட்டியானை ஒன்று ஜெயலலிதாவை தும்பிக்கையால் தள்ளிவிட முயன்றபோது ஜெயலலிதாவை பாதுகாத்தவர் பெருமாள் சாமி. ஜெயலலிதாவிற்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர் பெருமாள் சாமி.
ஜெயலலிதாவுடன் தொடர்புடையவர்கள் அனைவரிடமும் விசாரணை ஆணையம் விசாரித்து வருவதால், பெருமாள் சாமியை அடுத்த புதன் கிழமை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது. அதேபோல, ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றனுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.