ரஜினி விட்டதை பிடிக்க துடிக்கும் அர்ஜூன மூர்த்தி.. புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரக்கும் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Jan 28, 2021, 11:44 AM IST
Highlights

இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அவரை நம்பி வந்த அர்ஜுன மூர்த்தியும் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் ரஜினியால் அறிமுகம் செய்யப்பட்ட அவரது நிர்வாகிகள் கூட்டாக இணைந்து ரஜினி வழியில் ஆன்மீக அரசியலை தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.  

ரஜினி ஆரம்பிக்க இருந்த புதிய கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புவதாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அவர் புதுக் கட்சி தொடங்க திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும்  மார்ச் அல்லது ஏப்ரல்  மாதங்களில் நடைபெற வாய்ப்புள்ளது. அதை எதிர்கொள்ள  இப்போதே தமிழக அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பான  வியூகங்களிலும், காய்நகர்த்தல்களிலும்  அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு எதிர்பார்ப்பு மிக்க தேர்தலாக இது அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. 

ரஜினி அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல்நிலையை காரணம் காட்டி அவர் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கி உள்ளார். எனவே இந்தத் தேர்தலிலும் வழக்கம் போல அதிமுக-திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே நேரடி போட்டி என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கட்சி தொடங்குவதற்கான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் உருவாக்கிய நடிகர் ரஜினிகாந்த், பாஜகவின்  அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தார் அர்ஜூனா மூர்த்தியை தான் ஆரம்பிக்க இருந்த  கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அறிவித்தார். இன்னும் ஒரு சில நாட்களில் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்ட உடல்நல பிரச்சனை காரணமாக கட்சி தொடங்குவது என்ற முடிவில் இருந்து பின்வாங்கினார். 

இதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அவரை நம்பி வந்த அர்ஜுன மூர்த்தியும் பெருத்த ஏமாற்றம் அடைந்தார். இந்நிலையில் ரஜினியால் அறிமுகம் செய்யப்பட்ட அவரது நிர்வாகிகள் கூட்டாக இணைந்து ரஜினி வழியில் ஆன்மீக அரசியலை தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் நேற்று திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த அர்ஜுன் மூர்த்தி, ரஜினி என்னை நாட்டிற்கு அறிமுகம் செய்தது அனைவரும் அறிந்ததே. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பி என்னை நாட்டிற்கு அறிமுகம் செய்த அவரின் பாதம் தொட்டு வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அப்படியெனில் அர்ஜுன மூர்த்தி, ரஜினி ரசிகர்களின் ஆதரவுடன் மற்றும் ரஜினி அறிமுகம் செய்த முக்கிய பிரமுகர்களளுடன் இணைந்து அரசியல் கட்சி தொடங்க  இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசியல் கட்சி குறித்து அவர் முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதுதொடர்பான  அறிவிப்பை அவர் வெளியிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

click me!