அர்ஜுன மூர்த்தி எனது தந்தைக்கு ஆலோசகரா..!! தலையில் அடித்துக் கொண்ட தயாநிதி மாறன்.

By Ezhilarasan BabuFirst Published Dec 4, 2020, 3:01 PM IST
Highlights

இது முற்றிலும் பொய்யான தகவல். அது போன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை. இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அர்ஜுன மூர்த்தி முரசொலி மாறனின் ஆலோசகராக இருந்தவர் என்ற செய்தி முற்றிலும் தவறானது, அது பொய்யான தகவல் என திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முரசொலி மாறனின் மகனுமான தயாநிதி மாறன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அவரது ரசிகர்களில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின்னர் நேற்று தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். வரும்  ஜனவரி மாதம் அரசியல் கட்சி துவங்கப்படும் என்றும், அதற்கான தேதி டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். அதைத் தொடர்ந்து போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மருத்துவர்களின் அறிவுரையையும் பொருட்படுத்தாமல் மக்களின் நலனுக்காகவே தனது உயிரையும் பணயம் வைத்து அரசியலுக்கு வருவதாக கூறினார். அப்போது ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வை யாளராக தமிழருவி மணியன் செயல்படுவார் என்றும், அதேபோல் தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தி இருப்பார் என்றும் அவர் அறிவித்தார்.

அர்ஜுன மூர்த்தி ஏற்கனவே பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்து வந்த நிலையில் அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் அர்ஜுன மூர்த்தி தொடர்பாக பல்வேறு செய்திகள் சமூக வலைதளம் மற்றும் ஊடகங்களில் வெளியானது. அதாவது அர்ஜுன மூர்த்தி ஏற்கனவே திமுக  தலைவர் கருணாநிதியின் மனசாட்சியாக என வர்ணிக்கப்பட்டவரும், திமுக தலைவர்களின் மிக முக்கியமான வருமான முன்னாள் அமைச்சர்களில் ஒருவருமான முரசொலி மாறனுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர் என கூறப்பட்டது. இது அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் அறிவார்ந்த முரசொலி மாறனுக்கே  அரசியல் ஆலோசகராக இருந்தவர் இப்போது ரஜினிக்கு அரசியல்  ஆலோசகரா என்று பரபரப்பாக பேசப்பட்டது.  இந்நிலையில் இந்த தகவலை மறுத்து  தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும், முரசொலி மாறனின் மகனுமான தயாநிதி மாறன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:  

சில பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதளங்களில்  திரு. ரஜினிகாந்த் அவர்களால் துவங்கப்படவுள்ள கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ள திரு.அர்ஜுன மூர்த்தி, எனது தந்தை மறைந்த திரு.முரசொலி மாறன் அவர்களின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் என ஒரு செய்தியை வெளியிட்டுள்ளன. இது முற்றிலும் பொய்யான தகவல். அது போன்று எவரும் எனது தந்தையிடம் ஆலோசகராக இருந்ததில்லை. இதுபோன்ற தவறான செய்திகளை வெளியிட வேண்டாமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என அதில் பதிவிட்டுள்ளார். 

click me!