அதிமுக ஆட்களை விலைக்கு வாங்கி அதிமுகவையே அழிக்கப் பார்க்கறீங்களா..? திமுகவை விளாசிய ஈபிஎஸ்.!

By Asianet TamilFirst Published Sep 23, 2021, 8:55 PM IST
Highlights

அதிமுகவைச் சேர்ந்த 15 பேர், இப்போது திமுகவில் எம்எல்ஏக்களாக உள்ளார்கள். நம் கட்சியிலேயே விலைக்கு வாங்கி நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.
 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டட்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.  அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், “இப்போதுள்ள திமுக அமைச்சர்களில் 8 பேர் அதிமுக முன்னாள் அமைச்சர்கள். திமுகவில் ஆட்களே இல்லை. எல்லாருக்கும் வயதாகிவிட்டது. ஆனால், அவர்கள் நம்மை வாடகை டாக்ஸியைப் போல் அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் நம்மை அவதூறாகப் பேசுகிறார்கள். அதிமுகவைச் சேர்ந்த 15 பேர், இப்போது திமுகவில் எம்எல்ஏக்களாக உள்ளார்கள். நம் கட்சியிலேயே விலைக்கு வாங்கி நம்மை அழிக்கப் பார்க்கிறார்கள். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்பட்டு 1.98 லட்சம் வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தால் 45 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்திருக்கலாம்.

உள்ளாட்சித் தேர்தலில் திமுகவினர் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். ஆனால், இந்த முறை அது எதுவும் நடக்காது. நாங்கள் நடக்கவும் விடமாட்டோம். கூட்டுறவு வங்கிகளில் திமுகவை நம்பி நகையை அடமானம் வைத்தவர்கள் எல்லாம் வட்டி கட்ட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். 5 பவுனுக்குக் கீழ் இருந்தால் தள்ளுபடி என்று சொன்னார்கள். இப்போது, ஒரு குடும்பத்தில் ஒருத்தருக்கு மட்டும்தான் என்கிறார்கள். அதாவது, தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு., ஆட்சிக்கு வந்த பிறகு அப்படியே இன்னொரு பேச்சுப் பேசுவதுதான் திமுக.” என்று எடப்பாடி பழனிச்சாமி பேசினார். 

click me!