‘கடவுளின் சொந்த நாடு’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் கேரள மாநிலம், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், மாநிலத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்டிகைகளை வரிசைப்படுத்தி புதிய ‘ஆப்ஸ்’ (செயலி) ஒன்றை வெளியிட உள்ளது.
ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் ஆய்வுக்குபின், ரூ.28 லட்சம் செலவில் கேரள சுற்றுலாத்துறை சார்பில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
புவியியல் தகவல் முறையில்(ஜி.ஐ.எஸ்.) முறையில் இந்த செயலி இயங்குகிறது. இந்த செயலியில் ஒவ்வொரு மாவட்டத்தின் அமைப்பு, மக்கள் தொகை, கொண்டாடப்படும் விழாக்கள், பண்டிகைகள், பாரம்பரியம், பழக்கவழக்கம், உணவுகள், அங்கு செல்லும் பாதை வழிகாட்டி, கொண்டாடப்படும் நேரம், விழாவின் பூர்வீகம், பெருமை உள்ளிட்ட விஷயங்கள், அந்த மாவட்டத்தில் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் போன்ற விவரங்கள் அந்த செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.demo.prixelmedia. com/festival/fest/ என்ற முகவரியில் இந்த செயலி இயங்குகிறது. இந்த செயலியில் சென்று சுற்றுலாப்பயணிகள் தங்களின் பயணத்தையும் திட்டமிடலாம், எந்த நகரத்தில் இருந்து எங்கு செல்வது, ஒவ்வொரு நகரத்துக்கும், மற்றொரு நகரத்துக்கும் இடையே உள்ள தொலைவு ஆகியவற்றை கணக்கிட்டு சுற்றுலாவை திட்டமிடலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கோயில்கள், படகுபோட்டி நடக்கும் இடங்கள், பாரம்பரிய நடனங்கள், இசை விழாக்கள், கலை, விளையாட்டுக்கள் எங்கு நடக்கும் என்பதையும் அறிய முடியும்.
காசர்கோடு மாவட்டத்தில் 82 பண்டிகைகளும், கண்ணூர் 85 பண்டிகைகளும், வயநாடு மாவட்டத்தில் 44 பண்டிகைகளும், கோழிக்கோடு மாவட்டத்தில் 61 பண்டிகைகளும், பாலக்காடு 54, திருச்சூர் 88, எர்ணாகுளம் 85, இடுக்கி 68, கோட்டயம் 102, ஆழப்புழா 82, பத்திணம்திட்டா 55, கொல்லம் 53, அதிகபட்சமாக திருவனந்தபுரத்தில் 104 பண்டிகைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், கேரள மாநிலத்துக்கே உரிய பாரம்பரிய தோல் பொம்மலாட்டம், மலபார் ஆற்று திருவிழா, மனவீயம் கலாச்சார திருவிழா, ஒச்சிர களி, ஸ்பிளாஷ் வயநாடு, அனந்தபுரி சக்கா மகோத்ஸவம், மலபார் சர்வதேச பட்டம் விடும் திருவிழா குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தில் மதம், சாதி பாகுபாடியின்றி 10 திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அந்த 10 திருவிழாக்கள், பெயர்கள், எங்கு கொண்டாடப்படுகின்றன உள்ளிட்ட விவரங்கள் தரப்பட்டுள்ளன. இந்த செயலி மற்றும் லிங்குகள் விரைவில் கேரள மாநில சுற்றுலாத்துறை இணையதளத்தில் இணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தினர்.