மன்னிப்பு கேட்டுவிடு.. அன்புமணி தம்பிங்க உன்ன விட மாட்டாங்க.. ஆறவிடாமல் அடிக்கும் பாமக அருள்.

By Ezhilarasan BabuFirst Published Dec 2, 2021, 2:22 PM IST
Highlights

 எங்கள் மருத்துவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களை இழிவு படுத்தியது மட்டுமல்லாமல் எங்கள் சமுதாயத்தையும்  இழிவு படுத்தி இருக்குற, மன்னிப்பு கேள்.. மன்னிப்பு கேட்க வில்லை என்றால், உங்கள் படமும் ஓடாது, நீங்கள் வெளியில் வந்தாலும் சிரமம். 

நடிகர் சூர்யா அவர்கள் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் அன்புமணியின் தம்பிகள் மிகுந்த ஆவேசத்துடன் இருக்கிறார்கள், எனவே மன்னிப்பு கேட்டு விட்டால் பிரச்சினை ஓய்ந்துவிடும் என சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள் வலியுறுத்தும் வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது. ஏற்கனவே அவர் சேலம் மாவட்டத்தில் சூர்யாவின் திரைப்படங்களை திரையிட வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் மீண்டும் இவ்வாறு அதில் எச்சரித்துள்ளார். 

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் முக்கிய வேடத்தில் சூர்யா நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் ஜெய் பீம்,  இந்தத் திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் வெளியாகி மொழி, இனம் கடந்து சர்வதேச அளவில் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு பார்வையாளர்களை கொண்ட படமாக வெற்றிபெற்றுள்ளது. இப்படத்தில் பழங்குடியின இருளர்  ராஜாக்கண்ணு என்பவர் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட உண்மை சம்பவத்தை  மையமாக வைத்துப் புனைவுகளுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் வரும் உதவி ஆய்வாளருக்கு குருமூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல் அவரது இல்லத்தில் வன்னியர்களின்  அடையாளங்களில் ஒன்றான அக்னி கலசம் காலண்டர் மாட்டப்பட்டுள்ளது. இந்த காட்சி மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ குரு அவர்களையும், வன்னிய சமூகத்தையும் இழிவுபடுத்தும் நோக்கில் உள்ளதாக கூறி, பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து  உடனே அந்த காலண்டர் காட்சி மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அந்த காட்சி  வன்னிய சமூகத்தின் மீதுள்ள வன்மத்தின்காரணமாக வைக்கப்பட்டது என்றும், இதற்கு சூர்யா உடனே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தொடர்ந்து பாமக குரல் எழுப்பி வருகிறது. இந்நிலையில் அதன் இயக்குனர் ஞானவேல் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனாலும் பாமக உள்ளிட்ட கட்சிகள் அதில் திருப்பதியாக வில்லை. இதனால் சூர்யா-பாமக இடையே மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் ஏற்கனவே சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், 

சேலம் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் இனிவரும் காலங்களில் நடிகர் சூர்யா நடித்த திரைப்படங்கள் மற்றும் அவர் குடும்பத்தினரின் திரைப்படங்களை தயவுசெய்து திரையிட வேண்டாம் என திரையரங்க உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். அது அப்போது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனாலும் இந்த விவகாரத்தில் ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் மட்டும் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரையிலும் சூர்யா வருத்தமோ,மன்னிப்போ தெரிவிக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் பாமக  எம்எல்ஏ அருள் நடிகர் சூர்யா அவர்கள் மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிந்துவிடும், இல்லையென்றால் அன்புமணியின் தம்பிகள் சும்மா விடமாட்டார்கள் என எச்சரித்துள்ள வீடியோ ஒன்று மீண்டும் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:- நடிகர் சூர்யா அவர்களே நான் உங்களிடம் கேட்கிறேன்.. ஒரு மிகப்பெரும் சமுதாயமான வன்னிய சமுதாயத்தின் வழிகாட்டி எங்கள் மருத்துவர் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களை இழிவு படுத்தியது மட்டுமல்லாமல் எங்கள் சமுதாயத்தையும்  இழிவு படுத்தி இருக்குற, மன்னிப்பு கேள்.. மன்னிப்பு கேட்க வில்லை என்றால், உங்கள் படமும் ஓடாது, நீங்கள் வெளியில் வந்தாலும் சிரமம். அன்புமணி ராமதாஸ் அவர்களுடைய தம்பிகள் உன்னை விடமாட்டார்கள், கொந்தளிப்பார்கள், உடனடியாக மன்னிப்பு கேள், மன்னிப்பு கேட்டு விடுங்கள்.. மன்னிப்பு கேட்டு விட்டால்தான் அது உங்களுக்கும் நல்லது அனைவருக்கும் நல்லது. நன்றி இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

 

click me!