ஓபிஎஸ் இனி முதலமைச்சராகவே முடியாது….அதிரடி அன்வர் ராஜா…
122 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும் போது, புதிய முதலமைச்சர் என்ற பேச்சுக்கே இடமில்லை என அன்வர் ராஜா எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சசிகலா அணி ஓபிஎஸ் அணி என இரண்டு அணிகளாக பிளவுபட்டு நிற்கிறது. இந்த அணிகளை அதிமுகவில் மீண்டும் இணைப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இரு அணிகளும் பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து விரைவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், ஓபிஎஸ் ஆதரவு அணியினர் அதிமுகவில் இருந்து சசிகலாவை நிரந்தரமாக நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷனுக்கு மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் போன்ற கடும் நிபந்தனைகளை முன்வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, சசிகலா அணியினரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்ததையடுத்த பேச்சுவார்த்தை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா எம்.பி , ஓபிஎஸ் இனி முதலமைச்சராக வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
122 எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும் போது புதிய முதலமைச்சர் பற்றிய பேச்சுக்கே இடமில்லை” என்றும் அன்வர் ராஜா கூறினார்.