என்று தணியும் இந்த நீட் தாகம்..? கோவையில் விவசாயி மகன் பூச்சி மருந்து குடித்து மரணம்...

By Ganesh RamachandranFirst Published Oct 30, 2021, 12:06 PM IST
Highlights

ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர் கீர்த்திவாசன், மூன்றாவது முறையும் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆண்டுதோறும் நீட் தேர்வு நடைபெறும்போதும், நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போதும் தோல்வி பயம் அல்லது குறைந்த மதிப்பெண்கள் காரணமாக மாணவர்கள் தற்கொலைகள் நிகழ்கின்றன. கடந்த செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு தொடங்குவதற்கு முன்பிருந்து, தேர்வு நடைபெற்ற அடுத்தடுத்த நாட்களில் மூன்று மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர். நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பலை நிலவும் சூழலில் மாணவர்களின் தொடர் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் கோவை, கிணத்துக்கடவு அருகே முதூரில் கீர்த்திவாசன் என்ற மாணவர் நீட் தேர்வில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 20 வயதாகும் கீர்த்திவாசன், பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 2018ம் ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்துள்ளார். அவரது தந்தை குப்புசாமி கிணத்துக்கடவு முதூரை சேர்ந்த விவசாயி ஆவார். 2019, 2020 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் அவற்றில் கீர்த்திவாசனால் தேர்வுபெற முடியவில்லை. மனம்தளராமல் 2021ம் ஆண்டிலும் நீட் தேர்வை எழுதி முடிவுகளுக்காக பயத்துடன் காத்திருந்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, எந்த நேரமும் நீட் முடிவுகள் வரலாம் என்ற நிலையில், மீண்டும் தோற்றுவிடுவோமோ என்ற மன உளைச்சலில் கடந்த சில நாட்களாக இருந்துள்ளார் கீர்த்திவாசன். யாரிடமும் சரியாகப் பேசாமல், பயத்துடனேயே இருந்த கீர்த்திவாசன், நேற்று மதியம் 2 மணியளவில், விவசாய நிலத்தில் தெளிப்பதற்காக தந்தை குப்புசாமி வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

மகன் பூச்சி மருந்து குடித்து விழுந்து கிடந்ததைப் பார்த்துப் பதறிப்போன தந்தை குப்புசாமி, உடனடியாக கீர்த்திவாசனை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். எப்படியும் மகனை பிழைக்க வைத்துவிடவேண்டும் என்று போராடி, பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டுசேர்த்துள்ளார் குப்புசாமி. ஆனால் துரதிருஷ்டவசமாக சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை மாணவன் கீர்த்திவாசனின் உயிர் பிரிந்தது. தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. போலீசார் ”நீட் தேர்வு குறித்த மன உளைச்சலில் தற்கொலை” என்று பதிவுசெய்து தற்போது விசாரித்து வருகின்றனர்.

மற்ற மாநிலங்களை விடவும் தமிழகத்தில் நீட் தேர்வுக்குத் தீவிரமான எதிர்ப்பு நிலவி வருகிறது. மாணவர்கள் தற்கொலைகளும் அதிகரித்து வருகின்றன. நீட் வந்தபின்னர் தமிழகத்தில் 2017ல் நடந்த அனிதா தற்கொலை உட்பட, கடந்த 5 ஆண்டுகளில் குறைந்தது 16 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். நீட் வாழ்வின் முடிவல்ல, எல்லையில்லா பல வாய்ப்புகளின் களமாக உலகம் பரந்து விரிந்தது என்பதை மாணவர்களும் உணரவேண்டும், பெற்றோரும் பிள்ளைகளூக்கு உணர்த்த வேண்டும்.

நீட் தேர்வு மன உளைச்சலால் நிகழும் மரணங்களாஇ முடிவுக்கு கொண்டுவரவும், மாணவர்களுக்கு உதவவும், 104 என்ற இலவச உதவி எண்ணை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டால் மனநல மருத்துவர்களும், மருத்துவ ஆலோசகர்களும் எப்போதும் தயார் நிலையில் இருப்பார்கள் என்று அரசு உறுதியளித்துள்ளது. மன அழுத்தம், தற்கொலை எண்ணம் உடையோர் உளவியல் ஆலோசனைக்கு 24 மணி நேர அரசு உதவி எண் 104-ஐ தொடர்பு கொள்ளலாம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்... நீட் வாழ்வின் முடிவல்ல என்ற எண்ணத்தை மாணவர்கள் நெஞ்சங்களில் பதியவைப்போம்.

click me!