தமிழகத்தில் மேலும் ஒரு மாதம் முழு ஊரடங்கு..? மு.க.ஸ்டாலின் ஆலோசனை..!

By Thiraviaraj RMFirst Published May 20, 2021, 6:01 PM IST
Highlights

தமிழகத்தில் 15 நாள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் தினசரி பாதிப்பு குறையவில்லை; மாறாக இப்போது இந்தியாவில் பாதிப்பில் முதல் மாநிலம் ஆகிவிட்டது தமிழகம். 

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மே 24 ம் தேதி முடிவடைகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோரை உயிர்ப்பலி வாங்கி கோர தாண்டவமாடும் கொரோனா தொற்றைகட்டுக்குள் கொண்டு வர வேண்டுமானால், இன்னும் ஒரு மாதத்திற்கு முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியே ஆகவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தமிழகத்தில் 15 நாள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் தினசரி பாதிப்பு குறையவில்லை; மாறாக இப்போது இந்தியாவில் பாதிப்பில் முதல் மாநிலம் ஆகிவிட்டது தமிழகம். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அனைத்து கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் மே 22ல் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக அரசு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டசபையில் இடம் பெற்றுள்ள, 13 கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அவசர அவசியம் கருதி, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தம் வழிமுறைகள் குறித்து, ஆலோசனைகள் பெற, அவ்வப்போது கூடி விவாதிக்கும் என்றும், பொதுத்துறை செயலர் குழுவின் உறுப்பினர் செயலராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் இடம்பெற்றிருந்தார்.

இதற்கிடையே, தமிழகத்தில் தற்போது சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நியமிக்கப்பட்டது. இது வரும் 24ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. இதனால், மே 22 காலை 11:30 மணிக்கு தலைமை செயலகத்தில் 13 எம்எல்ஏ.,க்கள் அடங்கிய குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதில், கொரோனா பரவல், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது போன்றவைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழு உறுப்பினர்களிடம் பெறப்படும் பரிந்துரையின் அடிப்படையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

click me!