நேற்று சென்னையில் நடந்த பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி எழுந்து நிற்காதது வருத்தம் அளிக்கிறது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் நடந்த பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு மத்திய அமைச்சர் நிதின்கட்கரி எழுந்து நிற்காதது வருத்தம் அளிக்கிறது என தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று மேடையில் தமிழக நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். ஆனால் அதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்தி பேசுவது அழகல்ல என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி மத்திய மாநில அரசு துறைகள் சார்பில் சுமார் 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார். முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தும், தொடங்க உள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முதல் முறையாக பிரதமர் மோடி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரே மேடையில் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் அரசியல் குறித்து ஏராளமான அதிமுக பாஜக தொண்டர்கள் குழுமியிருந்தனர். மேடையில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக உள்ளது, வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமின்றி சமூக வளர்ச்சியையும் உள்ளடக்கியதுதான் தமிழகத்தின் வளர்ச்சி. சமூக நீதி, சமத்துவம், பெண்ணுரிமை இதில் உள்ளடக்கம் இதுதான் திராவிடம் மாடல் ஆட்சி என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், கச்சத்தீவை மீட்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும், தமிழகத்திற்கு தரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாட்டு பெரும் பங்கு வகிக்கிறது தமிழகம் வழங்கும் பங்களிப்புக்கு இணையாக மத்திய அரசு பல திட்டங்களை தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவரின் இந்த பேச்சை தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்து வருகிறார். பிரதமர் உள்ள மேடையில் மாநில முதலமைச்சர் பேசியதை எண்ணி வெட்கப்படுகிறேன், முதலமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கைகள் ஒரு மாநில முதல்வர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு சான்று, காங்கிரசுடன் சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்து விட்டு எந்த தைரியத்தில் கச்சத்தீவை மீட்க வேண்டும் என ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை வைக்கிறார்.கோரிக்கை வைப்பதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை என கடுமையாக விமர்சித்தார்.
இந்நிலையில் அண்ணாமலையின் இந்த குற்றச் சாட்டுக்கு பதிலளித்துள்ள தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தமிழக முதல்வர் ஸ்டாலின் மோடி இருந்த மேடையில் தமிழக நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடிக்கு நேராகவே முன்வைத்தார். ஆனால் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கொச்சைப்படுத்தி பேசுவது அழகல்ல, அண்ணாமலை ஒரு laughing star என்றார். நேற்று பிரதமர் கலந்து கொண்ட விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்கவில்லை, அவர் எழுந்து நிற்காதது வருத்தத்துக்கு உரியது. அனைவரும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்றோம், நிதின்கட்கரி எழுந்தது நிற்கவில்லை, அவர் எழுந்து நின்றிருக்க வேண்டும் என விமர்சித்தார்.