சிலைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஏழாம் பொருத்தம்தான். அதிலும் ஜெயலலிதாவின் ஆட்சி வந்துவிட்டால், தனக்கு பிடிக்காத நபர்களின் சிலையை வைத்து அவர்கள் செய்யும் அரசியல் அதிர வைக்கும். ஆனால் இன்றோ அதே ஜெயலலிதாவின் சிலை சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுதான் அதிர்ச்சியே!
கோயமுத்தூரில் நேற்று எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா நடந்தது. இதையொட்டி கோயமுத்தூர் சிட்டியில் அண்ணா சிலை இருந்த இடத்தை சில நாட்களாக பெரிய தகர ஷீட்களை கொண்டு மூடியிருக்கிறார்கள். கேட்டதற்கு, புணரமைத்து,பெயிண்ட் அடிக்கும் பணி நடக்கிறது என்றார்களாம். எல்லோரும் நம்பியிருக்க, விழா நாளன்று அதை ஒப்பன் பண்ணிவிட்டிருக்கிறார்கள்.அப்போதுதான் தெரிந்திருக்கிறது அதில் அண்ணா சிலைக்கு பக்கத்திலேயே எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளும் நிறுவப்பட்டுள்ள விஷயம்.
இப்படியொரு காரியத்தை செய்துவிட்டு மந்தகாசமாக சிரிக்கிறதாம் ஆளும் அ.தி.மு.க.
ஆனால் தி.மு.க.வோ கடுப்பாகி ‘இது நெடுஞ்சாலை. இதில் யாரை கேட்டு இப்படி கூடுதலாக 2 சிலைகளை வைத்தார்கள்? இப்படியாக நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் சிலை வைக்க அரசு அனுமதிப்பது இல்லையே! மெரீனா அருகே சிவாஜி சிலையை அகற்றியது இப்படியான பிரச்னையால்தானே! இந்த நிலையில் கோயமுத்தூர் அவிநாசி சாலையில், போக்குவரத்து நெருக்கடியான இடத்தில் இப்படியொரு விதிமீறலா! இதை சகிக்க மாட்டோம். உடனே ஆராய்ந்து, இது அனுமதியில்லாமல் ஏற்படுத்தப்பட்டிருந்தாலோ, விதிமுறை மீறல் இருந்தாலோ நிச்சயம் கோர்ட்டுக்கு சென்று இரண்டு சிலைகளையும் அப்புறப்படுத்துவோம்.” என்கிறது.
ஆனால் அமைச்சர் வேலுமணியோ ‘அண்ணா சிலையை வெச்சதே அ.தி.மு.க.தான். அதை நாங்கதான் அடிக்கடி புதுப்பிச்சு பராமரிக்கிறோம். இப்போ தலைவர் மற்றும் அம்மா சிலைகளையும் உரிய அனுமதி வாங்கித்தான் நிறுவியிருக்கோம்.” என்கிறார்களாம்.
ஆனாலும் சிலை மோதல் இப்போதைக்கு அடங்காது என்கிறார்கள். தி.மு.க. தரப்பு ‘சிலையை தூக்குவோம்’ என்று முறைக்க, அ.தி.மு.க. தரப்போ ‘முடிஞ்சா கை வெச்சுப்பார்’ என்று திமிர பஞ்சாயத்து பரபரக்கிறது.