அஞ்சாமை திராவிடர் உடைமையடா.. துரோக கும்பலிடம் இருந்து அதிமுகவை மீட்போம்.. தெறிக்கவிடும் டிடிவி.

By Ezhilarasan BabuFirst Published Oct 15, 2021, 9:40 AM IST
Highlights

இன்னொரு பக்கம் அண்ணாவின் இயக்கத்தை சுயநலத்தால் அபகரித்த தீயசக்தி கூட்டத்திடமிருந்து அண்ணாவின் உண்மை தொண்டர்களை தமிழ்நாட்டின் நலன் காத்திட புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய இயக்கத்தின் பொன் விழா ஆண்டு இது.

அஞ்சாமை திராவிடர் உடைமை என்பதன் அடையாளமாக, லட்சோபலட்சம் வெற்றிவேல்கள்  நம்மோடு இருக்கிறார்கள், தீயசக்தி கூட்டத்திற்கு சிம்மசொப்பனமாக புரட்சித்தலைவி காலத்து பெருமைகளையும் மீட்டெடுத்திடுவோம், புரட்சித்தலைவர் இயக்கம் கண்ட பொன்விழா ஆண்டில் புது உற்சாகத்தோடு இலக்கை நோக்கி பயணிப்போம் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-  புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மை தொண்டர்கலாம் கழக உடன்பிறப்புகளுக்கு... நம் இயக்கத்தின் ஆற்றல் மிக்க செயல் வீரராகவும் முன்னணி தளகர்த்தராகவும் திகழ்ந்த என் அருமை நண்பர் வெற்றிவேல் மண்ணில் விதைக்கப்பட்டு ஓராண்டு ஓடி விட்டது. தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகவும், 

தலைமைக்காகவும் எத்தனை இன்னல்களையும் தாங்கி களத்தில் நின்ற நம்முடைய வெற்றியின் இன்முகம் என்றென்றும் நம் நெஞ்சங்களை விட்டு மறையாது. எந்த சக்தியாலும் விலை கொடுத்து வாங்க முடியாத விசுவாசத்தின் இலக்கணமாக தன்னுடைய இயக்கப் பணிகளை அமைத்துக் கொண்டவர் வெற்றிவேல், அதன் வெளிப்பாடாகவே இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது அளப்பரிய அன்பும் பற்றும் கொண்டிருந்தார். அம்மா அவர்களின் மறைவுக்கு பிறகு அம்மாவின் உருவமாக நம்மோடு இருக்கும் தியாகத் தலைவி சின்னம்மா மீதும் என் மீதும் அப்பழுக்கில்லாத அன்பை காட்டினார். துரோகத்தின் தி நாக்குகளும், அதிகாரத்தின் அத்துமீறல்களும் நம்மை சுழன்று அடித்த போதும், ஒரு துளியும் சஞ்சலம் இல்லாமல் நான் தர்மத்தின் பக்கம் தான் இருப்பேன் என்று உறுதியோடு போராட்டக் களத்தில் நின்றவர் வெற்றிவேல். சூது மதியாளர்கள் சிலரால் அவரது எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்ட பிறகும், அதே உறுதியோடு, சொல்லப்போனால் முன்பைவிட இன்னும் வேகமாக இயக்கப் பணிகளை ஆற்றியவர் வெற்றி. 

அஞ்சாமை திராவிடர் உடைமையடா என்பதற்கு ஓர் அடையாளச் சின்னமாக வெற்றிவேல் போன்ற அப்பழுக்கில்லாத தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தை உருவாக்கி, இன்றளவும் வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எதிரிகளும், துரோகிகளும் ஏற்படுத்துகிற தடைகளையும், தருகிற இன்னல்களையும் உடைத்து நொறுக்கி இலக்கு நோக்கிய நமது பயணத்தை தொடர்வதற்கான சக்தியையும் இவர்கள் தான் நமக்கு தருகிறார்கள். அதனாலேயே சில காலங்களில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்த போதிலும், அதனை கண்டு துவண்டுவிடாமல் எந்த நோக்கத்திற்காக இந்த லட்சிய போராட்டத்தை தொடங்கினோமோ அந்த உணர்வு கொஞ்சமும் மாறாமல் நடை போடுகிறோம்.சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை தாண்டி அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கவனிக்கத்தக்க வெற்றியைப் பெற்றிருக்கிறோம். பல இடங்களில் வெற்றிக்கு பக்கத்தில் வந்திருக்கிறோம். ஏற்றுக் கொண்ட லட்சியத்திற்காக அவர்களைப்போல களத்தில் நிற்கும் லட்சோபலட்சம் வெற்றிவேல்கள்தான் இதற்கு காரணம்.

எதிர் வரும் காலங்களில் இன்னும் அதிக வெற்றிகளை குவித்து, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான பிள்ளைகள் நாம் தான் என்பதை தமிழக மக்களின் பேராதரவோடு நிரூபிப்பதே வெற்றிவேல் போன்றவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். நம்முடைய கொள்கை தலைவர்களான புரட்சித்தலைவராலும், புரட்சித்தலைவியாலும் தமிழ்நாட்டில் தீய சக்தியாக அடையாளம் காட்டப்பட்ட திமுக, காலம் செய்த கோலத்தால் ஆட்சி கட்டிலில் ஏறி விட்டது, ஆனால் அவர்களால் தமிழ்நாட்டின் உரிமைகளை தமிழக மக்களின் நலன்களை முழுமையாக காப்பாற்றிவிட முடியாது என்பதே கடந்த கால வரலாறு நமக்கு எடுத்துச் சொல்கிறது. நதிநீர் பிரச்சனைகளில் தொடங்கி, தமிழகம் அனுபவித்த அனுபவிக்கிற பல தீமைகளுக்கு திமுக என்னும் சுயநலக் கூட்டமே காரணம். எனவே அந்த தீய சக்தியை எதிர்ப்பதில் எந்த சமரசமும் இன்றி களத்தில் நிற்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இன்னொரு பக்கம் அண்ணாவின் இயக்கத்தை சுயநலத்தால் அபகரித்த தீயசக்தி கூட்டத்திடமிருந்து அண்ணாவின் உண்மை தொண்டர்களை தமிழ்நாட்டின் நலன் காத்திட புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய இயக்கத்தின் பொன் விழா ஆண்டு இது.

அதனை இந்தியாவின் 3வது பெரிய இயக்கமாக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாற்றிக் காட்டினார்கள். அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு அதன் பெருமை குறையாமல், தியாகத் தலைவி சின்னம்மா அவர்கள் கட்டி காப்பாற்றினார்கள். ஆனால் அந்த இயக்கம் எடுப்பார் கைப்பிள்ளையாக பெருமை இழந்து இன்றைக்கு நிலை தடுமாறி நிற்கிற சூழலை விரைவில் மாற்றி காட்டுவதற்கும், புரட்சித்தலைவர் இயக்கத்தின் பொன்விழா ஆண்டு தொடக்கத்தில் உறுதியேற்போம்.

நம்முடைய இயக்கத்தையும், தமிழ்நாட்டையும், புரட்சித்தலைவி அம்மா காலத்து சிறப்புகளோடு மீட்டெடுத்திடுவோம் என்றும், எதற்கும் அஞ்சாத லட்சோபலட்சம் வெற்றிவேல் நிறைந்திருக்கிற இந்த இயக்கத்தின் சார்பில் நாம் உறுதி எடுத்துக் கொள்வோம். நம்மோடு இப்போது களத்தில் நிற்கிற வெற்றிவேல் போன்ற எத்தனையோ பேரின் உழைப்பும், தியாகமும் நம்முடைய கரங்களில் வெற்றியை தரப் போகும் நாள் வெகு அருகில் இருக்கிறது என்ற நம்பிக்கையோடு லட்சிய பயணத்தை தொடர்ந்து விடுவோம். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!