தமிழகத்தின் புதிய தலைமைச்செயலாளராக திருமதி.கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டிருக்கிறார். நீண்டகாலத்திற்கு பிறகு தமிழக அரசில் நேர்மையான ஒருவர் தலைமைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சுகாதாரத்துறை அமைச்சராக நான் பணியாற்றிய போது தமிழக சுகாதாரத்துறையில் ஆணையராகவும், திட்ட இயக்குனராகவும் பணியாற்றியவர். இதுவரை வகித்த அனைத்துப் பொறுப்புகளையும் திறமையாகவும், நேர்மையாகவும் கையாண்டவர்.
24.01.2007 அன்று தலைமைச் செயலாளர் அந்தஸ்து பெற்று இதுவரை 10 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போது தான் தலைமைச் செயலாளர் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து மாற்றப்பட்ட இவர், அதன்பின் இவரது திறமைக்கு ஏற்ற முக்கியமான பொறுப்பு எதுவும் வழங்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.
இப்போது புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாலும், இன்னும் 30 மாதங்கள் இப்பதவியில் தொடர முடியும் என்பதாலும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழகத்தில் நேர்மையான நிர்வாகத்தை வழங்க அவர் பாடுபட வேண்டும்.
அரசியல் குறுக்கீடுகளை விலக்கி தமிழ்நாடு அரசு எந்திரத்தை சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும் என்று புதிய தலைமைச் செயலாளரைக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .